TerrorisminFocus

Friday, November 27, 2009

டபுள் டிப் பொருளாதார வீழ்ச்சி - கும்மாங்குத்து பொருளாதார வீழ்ச்சியும், துபய் கடன் அபாயமும்!!!

பொருளாதார மந்தம் முடிஞ்சிருச்சி என்று இந்த மாதம் ஆரம்பத்தில் ஆராவாரமாக அறிவித்தனர். கடந்த பல மாதங்களாக இப்படி ஒவ்வொரு மாதமும் அறிவிப்பது என்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த முறை இவ்வாறு அறிவிக்கப்பட்டதற்கு பொருத்தமாக இந்தியா போன்ற தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடுகள்(FII) குவியத் துவங்கின. ஐ எம் எப்ன் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் இந்தியா, இலங்கை, மொரிசியஸ் நாடுகள் வாங்கிய தங்கமும், சீனா போன்றவை வெளிச் சந்தையில் வாங்கிக் குவித்த தங்கத்தின் மூலமும் இன்னும் அதிகமான டாலர் சந்தையில் புலங்கத் துவங்கியது.

ஆனால், இவை நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கு நாடுகளில் என்றும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க வங்கிகள் சட சடவென ஒவ்வொன்றாக திவாலாகிக் கொண்டுள்ளன. இன்னிலையில் வந்தது ஒரு முக்கிய அபாய சங்கு. டபுள் டிப் பொருளாதார மந்தமாக இது விரிவடைகிறது என்பது போலான செய்திகள் வெளி வரத்துவங்கின.

டபுள் டிப் பொருளாதார மந்தம் அல்லது கும்மாங்குத்து அல்லது தெளிய வைத்து அடிக்கும் பொருளாதார மந்தம் என்பது - ஒரு பொருளாதார மந்தம் ஏற்பட்டு பிறகு அதிலிருந்து மீள்வது போல பிலிம் காட்டி விட்டு மீண்டும் மந்தத்தில் மீளாத் துயில் கொள்வது ஆகும்.

இத்தகைய நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை வழங்கி வரும் ஜீரோ வட்டி கடன் தொகையை தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடாக போட்டு வைத்தால் நல்ல லாபம் அடிக்கலாம் என்ற அடிப்படையில்தான் கடந்த வாரங்களில் FII இந்தியா போன்ற நாடுகளில் குவிந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைப்பது போல துபாய் கடன் விசவலை விரிந்துள்ளது.

துபாயின் பெருமைமிகு அரசு முதலீட்டு நிறுவனம் துபாய் உலகம்('துபாய் வேர்ல்ட'தாம்பா அப்படி மொழிபெயர்த்திருக்கேன்). இந்த நிறுவனம் வாங்கியுள்ள 60 பில்லியன் டாலர் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை மே மாதத்திற்குப் பிறகு வாங்கிக் கொள்ளுங்களேன், பீலீஸ் என்று கடன் கொடுத்தவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் அத்தனை பேர் மண்டையிலும் சந்தேகப் பேய் உட்கார்ந்து கொண்டது. இன்னும் வீழ்ச்சி முடியவில்லை, எவனெவன் எங்கேங்கே எப்படியெப்படி மாட்டிக் கொண்டுள்ளான் என்று தெரியவில்லை, எனவே கையில் உள்ள பணத்தை எச்சரிக்கையா வெளிய விடு என்ற சந்தைச் சந்தேகம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. நிதி வறட்சி மீண்டும் தலை தூக்குகிறது.

வரலாறு காணாத அளவுக்கு, வரைமுறையின்றி ஊக்கத் தொகைகளை மத்திய வங்கிகள் சந்தையில் புகுத்திய பிறகும், வட்டி விகிதங்களை சகட்டு மேனிக்கு குறைத்த பிறகும், தொடர்ந்து திவாலான நிறுவனங்களை அரசுகள் தோள் கொடுத்து தாங்கி பிடித்த பிறகும், பல்வேறு சலுகைகள் கொடுத்து வாயில் ஊட்டி விடாத குறையாக போஷாக்கு செலுத்திய பிறகும், பட்ஜெட் பற்றாக்குறைகள் விண்ணை எட்டிய பிறகும் மீண்டும் முதலாளித்துவ கிழட்டு குடிகாரனின் மீளா போதை மயக்கத்தை தட்டி எழுப்ப இயலவில்லையே என்று முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளாதார நிபுனர்கள் புலம்புகிறார்கள்.

துபாய் நிகழ்வு என்பது பரந்துபட்ட சிக்கலின் ஒரு துளி என்று சொல்கிறார்கள் முதலாளித்துவ நிபுனர்கள்.

உண்மையில், இது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பிரச்சினை, இது தீர்க்க முடியாத சுய முரன்பாட்டுச் சிக்கல் என்பதைத்தான் வேறு வார்த்தைகளின் மூலம் இப்படி ஒத்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.

கிழடு தட்டிப் போன பிறகும், நிதி மூலதன போதை தலைக்கேற தறிகெட்டு ஓடி முடங்கி போய்க் கிடக்கிறது முதலாளித்துவ கட்டமைப்பு. இந்த கிழட்டு குடிகாரனுக்கு நிரந்தரச் சங்கு ஊதுவதன் மூலம் பரந்துபட்ட மக்களை பேரழிவிலிருந்து காக்கும் கடமை ஒன்று மட்டும்தான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாக உள்ளது. ஏனேனில், நீண்ட நெடிய பொருளாதார மந்தங்கள் உலகப் போர்களையே உலகுக்கு பரிசாக அளித்துள்ளன.

இது மனிதாபிமானமுள்ளவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டுள்ளவர்களின் மனசாட்சிக்கு விடப்பட்டுள்ள சவால் ஆகும்.

அசுரன்


Thursday, November 26, 2009

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!!

வர்கள் வண்டிகளில் வந்து இறங்கினார்கள். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறி ஓடிய மக்களில் 12 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அவர்கள் படகுகளில் வந்தனர். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறிய ஓடிய மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களில் ஒன்று நடந்தது ஒரிஸ்ஸாவின் கலிங்கா நகர். ஒரிஸ்ஸாவின் இரும்பு கனிம வளம் நிறைந்த நிலங்களை போஸ்கோ என்ற பன்னாட்டு இரும்பு உருக்கு ஆலைக்கு கொடுப்பதை எதிர்த்துப் போராடிய கலிங்கா நகர் மக்கள் மீது காக்கி சீருடை அணிந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

இரண்டாவது சம்பவம் நவம்பர் 26 மும்பை ரயில் நிலையத்தில் பல வண்ண ஆடைகள் அணிந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

தற்போது, 11/26 இந்தியாவின் ஊடக-அரசியல் திருவிழாக்களில் ஒன்றாக மாறிவிட்டதை சில வாரங்களாகப் பார்க்கிறோம்.
நவம்பர் 26 ன் போது அந்த பக்கமாக குப்பை பெருக்கிக் கொண்டிருந்தவர் முதற்கொண்டு பேட்டியெடுத்து போட்டு அமளி கிளப்பிக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸின் பினாமி தொலைக்காட்சியான NDTVயினர்.

'மக்கள் பாதுகாப்பாக இல்லை'
'மும்பை மக்கள் கோபத்தில் உள்ளனர்'

இப்படி மக்களுக்கே தெரியாதவற்றையெல்லாம் கண்டுபிடித்து சுய அரிப்பை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். நவ 26 அன்று, மும்பை ரயில் நிலையத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒரு சடங்கு போல காட்டி முகம் திருப்பிக் கொண்டன இந்த ஊடகங்கள். ஆனால், இதே நேரத்தில் தமது வர்க்கத்தினர் கொல்லப்பட்ட தாஜ் ஹோட்டலைத்தான் முழுவதும் தொலைக்காட்சியில் ஒலி ஒளி பரப்பினர். மக்களும் சரி, மும்பை ரயில் நிலையமும் சரி நவம்பர் 26க்கு அடுத்த நாட்களிலேயே சகஜ நிலைக்கு திரும்பி விட்டிருந்தனர் எனும் போது, இன்றைக்கு ஒரு வருடம் கழித்து அந்த உணர்வு என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள இயலும்.

ஆனால், இதே நேரத்தில் காக்கி உடை பயங்கரவாதிகளையும், அவர்களை ஏவிவிட்ட கதர், காவி, சிவப்பு ஆடை அரசியல்வாதி-பயங்கரவாதிகளையும், அவர்களை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் எல்லை கடந்த பயங்கரவாத பன்னாட்டு கம்பனிகளையும் எதிர்த்து இன்று வரை கலிங்காநகர், நந்திகிராம், லால்கர் என மக்கள் போராடி வருகிறார்கள். அது குறித்து இந்த ஊடகங்கள் வாய் திறந்து பேசுவதில்லை.

பொய்யான உணர்வுகளை ஊதிப் பெருக்கி உண்மை என நிறுவுவதும், அன்றாட வழமையாகிப் போன ஒடுக்குமுறைகளை இல்லாதவொன்றாக சித்தரிக்க எண்ணி மறைப்பதும்தான் உலகமய காலகட்டத்தின் ஊடக தர்மமாகிப்(வியாபாரம், சுய அரசியல்) போனது.

நவம்பர் 26ன் நாய'கரா'க, பா. சிதம்பரத்தை நடுநாய'கமா'க நிறுத்தி(உட்கார) வைத்து சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் 'இந்தியா அண்டர் அட்டாக்' என்ற பொய்யான வருவித்துக் கொண்ட உணர்வுடன் கேள்விகளை விளாசிக் கொண்டிருந்தனர் NDTVயில். அது பார்ப்பதற்கு மூல வியாதி வந்தவனின் முக்கிய அவஸ்தைகளை எனது மனத்திரையில் விரித்தது.

என்னவொரு பதைபதைப்பு, ஆக்ரோசம்? சல்வாஜூடம் என்ற கூலிப் படையின் மூலம் ஒரு மாநிலமே எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்காகி பல நூறு பேர்களின் உயிரையும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் கபளீகரம் செய்து வருவது குறித்து இந்த ஆவேசமும், ஆக்ரோசமும் இவர்களுக்கு வருவதில்லையே?

இதைத்தான், இந்தியாவின் இதயத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தனது கட்டுரையிலும் அருந்ததிராய் எழுதியிருந்தார். (The Heart Of India Is Under Attack, By Arundhati Roy - 31 October, 2009, Guardian.co.uk.) இந்தியா அண்டர் அட்டாக் என்பதை விடுங்கள், இந்தியாவின் இதயமே அட்டாக் ஆகி உள்ளதே என்ன செய்யப் போகிறீர்கள் என்று எவனும் கேள்வி கேட்கவில்லை.

நவ 26 எனது உணர்ச்சிகளை முடக்கிப் போட்டதாக சொல்கிறார் தெண்டுல்கர். இன்றைய நிலவரப்படி இந்தியாவின் தலை சிறந்த தேச பக்தராக முன்னிறுத்தப்படுபவர் இவர்தான். ஆயினும் இவரால் மும்பை தாக்குதல்களுக்கு மட்டும்தான் இவ்வாறு முடங்கியிருக்க முடிந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் - சட்டீஸ்கர், கர்நாடகா, மஹாராட்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பீஹார் - பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களுக்காகவும், தமது கொழுத்த லாப வேட்டைக்காகவும் நடத்தி வரும் அரசு பயங்கரவாத தாக்குதல்கள் இவர்களை பாதிக்கவில்லை. பாதிக்கப் போவதுமில்லை.


நவம்பர் 26 தாக்குதலின் போது கூட தெளிவாக தாஜ் ஹோட்டலை கட்டியழுதவர்கள், இன்றுவரை அழுது கொண்டிருப்பவர்கள்தான் இவர்கள். அவர்கள் யார் என்பதில் அவர்கள் வெகு தெளிவாக உள்ளனர்.

அப்படியென்றால் நாம் யார்? எது தேச பக்தி? எது எல்லை தாண்டிய பயங்கரவாதம்? எனது இந்தியா எது? எந்த இந்தியா யாரால் தாக்கப்படுகிறது? இந்த கேள்விகளில் அடங்கியுள்ளது யார் நான் என்பதற்கான பதில்கள். விடை தெரியும் போது மிகப் பெரும் உள்நாட்டு அபாயமாக நீங்களே சித்தரிக்கப்படும் அபாயமும் நிகழலாம்.

அசுரன்

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)


மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 2)

Wednesday, November 11, 2009

சுகாதாரத்துறை தனியார்மயம் - தாய்மையை கருவறுக்கும் அவலம்

னியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் முதலில் கேட்க்கப்படும் கேள்வி மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதுதான். ஆம் என்று சொன்னால் ஆபத்து அங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று பொருள். நமக்கு தேவையோ இல்லையோ எதையாவது அறுத்துக் கட்டி, எக்ஸ்ட்ரா பணம் சேர்த்து காப்பீட்டின் மூலம் கறந்துவிடுவார்கள் தனியார் மருத்துவமனைகள்.

இந்த அவலம் எந்தளவுக்குச் சென்றுள்ளது என்றால், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு அவர்களின் கருப்பை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இப்படி வெட்டி எடுப்பது தேவையே இல்லை என்ற போதிலும் பண வெறி பிடித்தழையும் தனியார் மருத்துவமனைகள் இவ்வாறு செய்து வருவது வெளி வந்துள்ளது.

ஒரு பக்கம் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு வருடா வருடம் வரி தள்ளுபடியாக மட்டும் பல லட்சம் கோடிகளில் கொடுத்துள்ள அரசு, இன்னொரு பக்கம் அடிப்படை வசதிகளை தனியார்மயப்படுத்தி வருகிறது. இவ்வாறு மிகப் பெரிய அளவில் தனியார்மயமான ஒரு துறைதான் மருத்துவத் துறை. ஏற்கனவே, ஏழை எளிய மக்களிடம் மதுரை, சென்னை, கோவை நகரங்களில் கிட்னி திருடப்பட்டது போன வருடம் வெளிவந்தது. இந்த வருடம் தாய்மை திருடப்படுகிறது.

மக்களின் வரிப்பணத்தில் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு அள்ளி வழங்கும் அரசு. மக்களுக்கு அத்தியாவசியமான சுகாதரத்துறையிலும் அவர்களை கை விட்டு அனாதரவாக அலைய விடுகிறது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றுதான் ஒரே கதி என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இதனை வைத்து தனியார் மருத்துவ கம்பெனி பிசினஸ் சக்கை போடு போடுகிறது. மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் மருத்துவத்துறை ஏற்கனவே இந்தியாவில் மிக அதிகப்படியாகவே தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மிச்ச சொச்சம் இருக்கும் தொழில் நேர்மை, மருத்துவரின் புனிதம் போன்ற பழைய உலகத்து அடையாளங்கள் சுத்தமாக வழித்தெடுக்கப்பட்டு உலகமய கொள்கைகளுக்கு ஏற்ப மருத்துவத்துறையும் முதலாளித்துவ லாப வெறிக்கு இரையாகி வருகிறது. மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாண்டால் மண்டை உடையும், அமைதி கெடும் எனவே தடை செய்தது சரி என்று பேசிய மிக நல்லவர்கள் எல்லாம் இது போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது காணாமல் போய் விடுகிறார்கள்.

நாட்டை வல்லரசாக்குகிறோம் என்ற பெயரில் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் மூலம் இந்த நாடு கருவறுக்கப்படுவதன் அம்சங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இத்தகைய தனியார்மயமும், லாப வெறியும், போட்டியும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் நாளைய உலகம் சுடுகாட்டில்தான் வசிக்கும்.


Surgeries under govt insurance plan in question
Publication: The Times Of India - Chennai; Date: Nov 10, 2009; Section: Front Page; Page: 1
Hysterectomy On Many Women Was ‘Needless’

Pushpa Narayan | TNN

Chennai: At 25, it was a surgery Meena Kumari least expected. She had complaints of an irregular menstrual cycle last year. A city-based private hospital then diagnosed a small fibroid as the problem and removed her uterus. Covered as she was by the government employees’ health insurance scheme, the hospital sent a Rs 40,000 bill to the insurance company.

Sounds routine, but her surgery has now been termed “needless” by an expert panel of doctors from the insurance company running the scheme. What’s more, an ongoing audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that Meena’s case resembled a sizeable number of hysterectomies done under the scheme in the last one year — they were unwarranted and left many young women unfit to conceive.

The findings suggest medical ethics violations and an excessive tendency to use elaborate procedures on patients, presumably to inflate bills. “Many young women need not have gone through the surgery. Many of them needed just medicines to regularise their periods. They had no family history of cancer or any problem with their reproductive system,” said V Jagannathan, chairman, Star Health, who has recently been holding marathon meetings against such practices.

The insurance scheme covers 12 lakh government employees and their dependents. Since its launch in late 2008, 16,000 women have undergone hysterectomies or overectomies for removal of uterus or ovaries. According to the data, 30% of the surgeries were suspect, and of these, at least 540 women were in the age group of 25-35 — and more than 100 in the 20-30 age group. As a result of the surgery, many of those under 30 may have hit menopause early, apart from losing all chances of bearing a child.

Under The Knife

At least 540 women in 25-35 age group have had their uterus or ovaries removed

Case sheets of patients show that for fibroids as small as 1.4cm, uterus and ovaries have been removed

Around 30% of such surgeries have been termed needless by doctors employed by insurance firms

Tamil Nadu health secretary VK Subburaj said the state health department was yet to get any formal complaint Hospitals warned on unwanted surgeries

Chennai: An audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that tendency to use elaborate procedures on patients to inflate bills is commonplace.

“One patient told us how she had agreed to the surgery only because she was told the fibroid could turn cancerous,” Star Health chairman Jaganathan said.

Parallel audits on other insurance schemes show that uterus removal for women below 30 years was very low. “We have 1.5 lakh women under the age of 35 covered under the company’s own general health insurance scheme. Of this, just seven women below the age of 35 have had their uteruses removed,” Jagannathan said.

Case sheets of patients billed to Star show that for fibroids as small as 1.4cm, many patients in the government scheme had had their uterus and ovaries removed. Reacting to the findings, fertility expert Dr Priya Selvaraj said: “As far as possible, we ensure that a woman retains her reproductive organs.”

Health secretary VK Subburaj said the health department was yet to get any formal complaints. “If any hospital is found violating rules we will initiate criminal action,” he said. Recently, the insurance company removed two private hospitals in Nagercoil and Kanyakumari for charging extra from beneficiaries of the Kalaignar health insurance scheme.

There are also false claims by some hospitals. A patient who underwent cataract surgery was found not to have an intra-ocular lens implanted as mentioned in the bill.

Finance secretary G Gnanadesikan said state employees had benefited much from the scheme. “We paid premium of Rs 120 crore for 12 lakh employees, who get Rs 2 lakh cover for two years. At the end of the first year, we have received claims for more than Rs 125 crore.”


அசுரன்

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!

தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலக வங்கி உத்தரவு : தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

சிறுநீரகக் கொள்ளை :வெட்கங்கெட்ட இந்திய அரசு

தாய்மையை விலை பேசும் உலகமயம்

தாய்மை விற்பனைக்கு

Wednesday, November 04, 2009

மீள் பிரசுரம்: வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

மறுபதிப்பு: ஆகஸ்டு 2006ல் பதிப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுரை காலப்பொருத்தம் கருதி மீண்டும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. விமர்சனங்கள், விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. தோழி லிவிங் ஸ்மைல் அந்தக் குறிப்பிட்ட பதிவில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில தேவையற்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்தக் கட்டுரையை மீண்டும் வெளியிடும் தேவை என்ன? சமீபத்தில் ஒரு முஸ்லீம் அமைப்பு வந்தே மாதரத்தை முஸ்லீம்கள் பாடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இது போல மத அமைப்புகள் மக்களின் சமூக வாழ்வில் தலையிடுவதும், முடிவெடுப்பதும் அராஜகமானது என்பதும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இதை விட முக்கியமாக இந்தப் பிரச்சினையை வழக்கம் போல தனது மத வெறி பிரச்சாரத்திற்கு ஆர் எஸ் எஸ், பாஜக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரம் செய்வதே முக்கியமானது என்று கருதுகிறேன். முஸ்லீம்கள் மட்டுமல்ல, மக்கள் மீது காதல் கொண்டவர்கள் யாருமே இந்த கேடு கெட்ட பாடலை பாட மாட்டோம் என்று சொல்வதுதான் நியாயமானது என்பதை உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது. அந்த அடிப்படையிலேயே இந்த கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

மேலும், சமீப காலங்களில் வலையுலகில் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் குரல் வலுவிழந்து வருவதும், தீடிரென மேல்தட்டுக்கு உயர்ந்துள்ள நடுத்தர வர்க்கத்தின் அரைகுறை நாட்டுப்பற்று இந்துத்துவத்தின் குரலாக ஒலிப்பதும் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பான பிரச்சினைகளில் முற்போக்கு கருத்துக்களை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தும் வகையிலும் இந்தக் கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

தோழமையுடன்,
அசுரன்

##############################

வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

"எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே."


"விளக்கமா சொல்லு"


"அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க!"


"நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே?"

"அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி?"

"என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? யார் கூட? அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா? ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத?"

"அண்ணே! விசயம் அது இல்லண்ணே! செக்கப் பத்திக் கேளுங்க!"

"கொஞ்சம் சும்மா இருப்பா நீ! எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம்? எங்க ஓடிப் போனாங்க?"

********



இந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.

வந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:

நாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று.. சுயசார்புக்கொள்கையை அணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் 'வந்தேமாதரம் பஜனை'யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.

தேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகு வைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்த விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).

இவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல் கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு 'நற்சான்றிதழ்' தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.

இதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, 'ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்?" என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.

மருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) 'தேசபக்தி' பற்றிப் பினாத்துகிறார்களே? அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் 'வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்' என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே! அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட 'தேசபக்தி' வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் 'தேசிய முதலாளிகள்' மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.
சரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே!

வந்தே ஏமாத்துறோம்! எப்படி?
"மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.

இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 'ஆனந்த மடம்' எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் 'வந்தே மாதரம்' (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் 'வந்தே மாதரம்' இப்படித்தான் தோன்றியது.

"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது.." இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.

அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!


காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் 'வந்தே மாதரத்தை'ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.


கோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி "இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி" என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே 'மாதா'க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் 'விடுதலை கீதம்' என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.

மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:


இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.


இப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்தும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.


இது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).

பாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமா வேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து - உழைக்கும் வர்க்கம்:


வந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து 'வந்தே ஏமாத்துறோம்' எனச்சொல்வது கேட்கிறது.


இந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே 'வந்தே மாதரம்' போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு 'போலி தேசப்பற்று' பேசி அதற்கென 'நாய்ச்சண்டை இடுவது' எவ்வாறு சாத்தியமாகின்றது?


மக்களிடம் நாம் உண்மையான அரசியலை - அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை - பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.


பிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

Related Posts with Thumbnails