கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது, ஆனால் உலக வங்கி தலையிடலாம்!!
எலி தின்று வீணாகப் போகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடு என்று நீதிமன்றம் சொன்னதற்கு பிரதமர் சொல்லிய பதில். 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'. இதுக்கு முன்பு உலக வங்கி, அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுரகம் போன்றவை இந்திய அரசின் எல்லா கொள்கைகளையும் தீர்மானித்தனவே அப்போதெல்லாம் மன்மோகன் இப்படித்தான் குதித்தாரா? இல்லையே? அப்புறமென்ன கொள்கை முடிவு? வேறொன்றும் இல்லை, உலகமயக் கொள்கைகளை உலக வங்கியின் ஆணைப்படி நிறைவேற்றுவதைத்தான் மன்மோகன் இப்படிச் சொல்கிறார். அந்தக் கொள்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் இலவசம் என்று சொன்னதைத்தான் மன்மோகன் எதிர்க்கிறார்.
இலவசம் என்பது பன்னாட்டு முதலாளிகளுக்கு மட்டும்தான், ஏழை மக்களுக்கு டிவி பொட்டி வேண்டுமானால் இலவசமாகக் கிடைக்கும். ஆனால் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படாது. ஏனேனில், இவையெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் வியாபாரப் பொருட்கள். இவற்றை இலவசமாகக் கொடுத்துப் பழக்கினால் விலை வைத்து விற்று பன்னாட்டு கம்பனிகள் லாபம் பார்ப்பதை மக்கள் விரும்ப மறுப்பார்கள். எனவேதான் உலக வர்த்தகக் கழகம் தெளிவாகச் சொல்கிறது இவற்றை சரக்கு என்று. இந்த கொள்கையில்தான் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று குதிக்கிறார் மன்மோகன் சிங்.
ஏறு பூட்டி விளைவித்த விவசாயிக்கே விளை பொருளின் மீது உரிமையில்லை, பட்டினியில் சாகிறான். ஆனால் இவன் சொல்கிறான் உணவை இலவசமாகக் கொடுக்க முடியாது என்று. யாருடைய சொத்து அது? இவனுடைய அப்பன் வீட்டுச் சொத்தா அது? இதனால் விவசாயிக்கு பாதிப்பு என்கிறார் மன்மோகன். புதிய பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் அழிவதைப் பற்றி கேட்டால், உணவு உற்பத்தி குறைவதைப் பற்றி கேட்டால் நாடு தொழில்மயமாக வேண்டும் என்று சொல்லும் நீ, இப்போது மட்டும் விவசாயிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறாயா?
கோதுமை அதிகமாக விளைந்தால் அதை கடலில் கொட்டுவேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன், பால் உற்பத்தி அதிகமானால் அவற்றை கொட்டி அழிப்பேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன் இதுதானே மேலை நாடுகளின் சந்தை விதிகள். இதைத்தானே மன்மோகனும் வேறு மொழியில் - அடிமைகளின் மொழியில் - பேசுகிறார்?
இன்னுமாயா இதை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்னு சொல்லிட்டுத் திரியுறீங்க? உலகின் மிகப் பெரிய பிண நாயகம்னு சொல்லுங்க அதுதான் சரி.
அசுரன்









