TerrorisminFocus

Showing posts with label ஒன்று. Show all posts
Showing posts with label ஒன்று. Show all posts

Wednesday, July 18, 2007

புரட்சி எங்கே எப்போ எப்படி நடக்கும்னு சொல்லமுடியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வந்துறும்

ன்று விளையாட்டு விளையாட என்னை கூப்பிட்டிருந்தார் லக்கிலுக். அவரது அன்பு வேண்டுகோளை ஏற்று இதோ ஒன்று போட்டுவிட்டேன். ஏற்கனவே தோழி வித்யாவிற்க்கு வியர்டு பதிவும், நண்பர்கள் We The People மற்றும் குட்டி பிசாசுவிற்கு எட்டு போடவும் நான் கடன் பட்டுள்ளேன். அவற்றை போட சிறிது சிந்தனையை செலுத்த வேண்டியிருக்கிறது. மாறாக ஒன்று போட லக்கிலுக் கேட்டிருந்த கேள்வி சமீபத்தில்தான் மயிர் பிளக்க விவாதம் செய்த ஒரு தலைப்பு என்பதால் சுலபமாக ஒரு ஐந்து நிமிடத்தில் பதிவதற்க்கான வாய்ப்புள்ளதாக அமைந்துவிட்டது. வித்யாவும், We the peopleவும், குட்டி பிசாசும் என்னை பொறுத்துக் கொண்டு கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும் ஒன்று போடுவது 24 மணி நேரத்தில் பதிய வேண்டுமாம் என்ற புதிய தந்திரமான ஒரு விதிமுறையை சேர்த்து சதி செய்து விட்டார்கள் அதனை ஆரம்பித்தவர்கள் (அவிங்கள்ளாம் நல்லாவேஎ.எ...எ... இருப்பாய்ங்க....)


லக்கி என்னிடம் கேட்டிருந்த கேள்வி:

தமிழ் சமுதாயத்திற்குள் புரட்சி எப்போது, எந்த வழியில் மலரும்?

மிழ் சமுதாயத்துக்கு என்று தனியாக புரட்சி சாத்தியமில்லை. ஏனேனில் தமிழ் சமுதாயம் இந்தியா என்ற நிலபரப்புடன் பிரிக்க இயலாத அளவு ஒன்று பட்டு உள்ளது. ஒரு வேளை தேசிய இன ரீதியான தனி தேசிய புரட்சி குறித்துதான் நீங்கள் பேசுகிறீர்கள் எனில் அது குறித்து சில அடிப்படை பிரச்சனைகளை விவரிப்பது சரி என்று கருதுகிறேன். வரலாற்று ரீதியாக சில நூறு வருடங்கள் இந்தியாவுடன் வணிகம், கலாச்சாரம், அரசியல், பண்பாடு என்று பின்னி பிணைந்துள்ள ஒரு நிலப்பரப்பை தனியாக துண்டித்து புரட்சி செய்வது என்பது சாத்தியமில்லாத விசயம். அதுவும் மத்திய அரசு என்பது மிக மிக வலுவானதாக இருக்கின்ற ஒரு நாட்டில் தேசிய புரட்சி என்பது சாத்தியமில்லாதது. இவையெல்லாவற்றையும் விட உலக மேலாதிக்க ஏகாதிபத்திய கனவின் ஒரு அங்கமாகவே இன்றைக்கு பல்வேறு நாடுகளின் பிரச்சனைகள் உள்ளன. இப்படி சொல்வதன் அர்த்தம் அந்த பிரச்சனைகளின் வரலாற்று ரீதியான அம்சங்களை புறக்கணிப்பது என்றல்ல. மாறாக, அந்த வரலாற்று தொடர்ச்சியை தனக்கு சாதகமான அரசியல் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன என்பதை சுட்டவும் இந்த யாதர்த்த நிலையிலிருந்து தற்போதைய பிரச்சனைகளை பரிசீலிப்பது என்பதை சுட்டவும் இதை சொல்கிறேன்.

ஒருவேளை தமிழகத்திற்க்கு மட்டும் புரட்சி எனில் யாருக்கெதிராக புரட்சி? யாருடைய ஆதிக்கத்திலிருந்து விடுபட புரட்சி செய்வது? சந்தேகமில்லாமல் தமிழ் தேசியத்தின் மீது அதன் உரிமைகள் மீது ஆதிக்கம் உள்ளது. ஆனால் இந்த ஆதிக்கம் என்பது இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக்கூடமாக வைத்து சுரண்டும் ஏகாதிபத்திய - பார்ப்பனிய சுரண்டலின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இந்தியாவில் சுரண்டும் தேசிய இனம் என்று ஏதேனும் துலக்கமாக உள்ளதா? உண்மையில் தேசியம் என்ற பெயரில் செயல்படும் எல்லாவித அடக்குமுறைகளும் நிலபிரபுத்துவமாகவே இருப்பதுதான் இந்தியா போன்ற நாடுகளின் சிறப்பியல்பு.

அப்படியெனில் நிலபிரபுத்துவத்துக்கு எதிராக போராடுவது சரியா அல்லது நிலபிரபுத்துவம் தேசிய வேடம் அணிந்து வருகிறது என்பதால் அதனை தேசியம் என்றே வரையறுத்து போராடுவது சரியா? எந்த தேசியத்திற்க்கு எதிராக போராடுவது? யாரை நட்பு சக்தியாக வரையறுப்பீர்கள். தமிழகத்தில் உள்ள தேவர் தமிழ தேசியர், கள்ளர் தமிழ் தேசியர், கவுண்டர் தமிழ் தேசியர் போன்ற பிரிவுகளை எப்படி சரி செய்வது? இவையெல்லாம் மற்ற பிரிவுகளைப் போல சமரச்ம் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும் சமூக பிரிவுகளா? இல்லையே? உண்மையில் தேசியம் என்பதைவிட இது போன்ற சாதிய பிரிவுகள்தானே முரன்பட்டு மோதிக் கொள்கின்றன. தேசியம் என்ற பெயரில் செய்யப்படும் பெரும்பாலான முரன்பாடுகள் கூட இந்த நிலபிரபுத்துவ சாதிய தேவைக்கான செயல்பாடாக இருக்கின்றனவே? பிறகு எப்படி இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தேசியம் என்ற one of the பிரச்சனையில் சுருக்கி அதற்க்கு விடிவு கிடைத்தாலே மற்ற எல்லாவற்றிற்க்கும் விடிவு கிடைத்துவிடும் என்று நம்புவது?

இதையெல்லாம் விட முக்கிய விசயமாக இருப்பது மக்களின் சமூக பொருளாதார கோரிக்கையிலிருந்துதான் புரட்சியின் தன்மை என்னவென்பது பரிணமிக்கிறது. தமிழகத்தில் தேசிய உரிமை என்பது மக்களின் சமூக பொருளாதார கோரிக்கையாக இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏனேனில் இங்கு நிலவும் பல்வேறு முரன்பாடுகள் உண்மையில் சாதிய முரன்பாடுகளாகவும், ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலின் நலனுக்கான முரன்பாடாகவுமே இருக்கிறது. எனவே மக்களின் கோரிக்கையும் இவற்றை முறியடிக்க ஏதுவானது எதுவோ அது குறித்தனதாகவே இருக்கிறது.

ஒரு வேளை தமிழ் தேசியம் என்ற ஒரு தீவு உருவாக்கப்பட்டு அது அதிகாரப்பூர்வமாக விடுதலை பிரதேசமாக அறிவிக்கப்படுகின்ற பட்சத்தில், அதுவும் அந்த புரட்சி என்பது தேசிய விடுதலை புரட்சி என்று அடையாளப்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள பிற தேசியங்களை தூண்டிவிட்டு பார்ப்பினியமும், ஏகாதிபத்தியமும் அந்த விடுதலை பிரதேசத்தை சுலபமாக நிர்மூலமாக்கி விடும். இந்திய புரட்சி என்பதே உலக ஜனநாயக சக்திகளின், அண்டை நாடுகளின் ஜனநாயக சக்திகளின் ஆதரவின்றி சாத்தியமில்லை எனும் போது தேசியம் என்ற பெயரில் நடத்தப்படும் தமிழ் தேசிய புரட்சி என்பது அண்டை மாநிலங்களின் பெருவாரி மக்களை பகைத்துக் கொண்டு நிலைபெறுவது சாத்தியமே இல்லாத விசயம். ஆக இந்தியாவிற்க்கு எப்பொழுது புரட்சி நடக்கிறதோ அன்றுதான் தமிழ் சமுதாயத்திற்க்கும் நடக்கும்.

இதற்க்கு சித்தாந்த வழிப்பட்ட விளக்கம் ஒன்றும் கொடுக்கலாம். ஆனால் நண்பர்களுக்கு அதை விளக்குவது என்பது மிக மிக விரிவான ஒரு கட்டுரையாக மாறிவிடும். அந்தளவுக்குதான் எனது மொழி வல்லன்மை நிலை உள்ளது. ஏற்கனவே செந்தழல் ரவி இங்கு பேசுகின்ற பல விசயங்கள் புரிவதில்லை என்று குறைபடுகின்ற பொழுது ஓரளவு பொது புத்தியில் பதிந்த விசயங்களைக் கொண்டே பிரச்சனைகளை விளக்குவதுதான் சரியாக இருக்கும்.(அப்பயம் கூட ஒன்னும் பிரியல என்று நண்பர்கள் சொல்லுவது காதில் விழுகிறது).

இங்கு ஒரு முக்கியமான விசயம், சோவியத ரஸ்யா உள்ளிட்ட மேற்கு நாடுகளிலோ அல்லது பிற முதலாளித்துவ நாடுகளிலோ நடந்தது போல ஒரிரு நாட்களில் பேரெழுச்சியாக புரட்சி இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறாது. மாறாக இங்கு நடைபெறும் புரட்சி நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்கிற வருடக்கணக்கிலான புரட்சி ஆகும். ஏனேனில் இந்தியா ஏற்றத்தாழ்வான ஒரு நாடாக இருக்கிறது. மைய அரசு என்பது நகரங்களில் மட்டும்தான் அதிகாரம் செலுத்துகிறது. கிராமங்களில் நிலபிரபுத்துவ சாதியமே அதிகாரம் செலுத்துகிறது. எனவே நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்கிற புரட்சி வடிவமே இங்கு சாத்தியம்.

தலைப்பை ஓவராக நோண்ட முயன்றால பதில் கிடைக்காது. அது சும்மா ஒரு கவர்ச்சிக்காக வைத்தது.

****************
நான் அடுத்து கேள்வி கேட்க்க விரும்புகிறவர் மிதக்கும் வெளி

"அமைப்பு ரீதியாக சமூக மாற்றத்திற்க்காக செயல்படுவதில் மிதக்கும் வெளிக்கு உள்ள சிக்கல் என்ன?"

அசுரன்

Related Posts with Thumbnails