சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!

சீமான் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ளார். பிரிவினையைத் தூண்டும் வகையில் அவர் பேசினாராம். ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடும் பேச்சுக்களை எந்த பயமும் இன்றி பேசி வரும் வேளையில், சீமானுடைய பேச்சு ஒரு பெரிய விசயமே இல்லை. ஆனால், இதற்கு முன்பு கோக்கை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தேசத் துரோகம், பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த குற்றம் போன்றவற்றிற்காக 'மட்டுமே' தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் சீமான் மீது அதே சட்டம் பாய்ந்துள்ளது ஆச்சர்யமானது அல்ல.
ஆனால், அச்சட்டம் சீமான் மீது பாய்ந்துள்ள நேரம் சில விசயங்களை முன்னறிவிக்கின்றன. அது இந்திய அரசு பாசிசமயமாகிவிட்டது என்பதைத்தான். இந்திய அரசை எதிர்க்கும் அதன் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்தவொரு பேச்சுக்களும் கடுமையான சிறைவாசத்தையே எதிர்கொள்ளும் என்பதே சீமான் கைது அறிவிக்கும் செய்தி.
இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற காட்டு பாசிச நிலையை நோக்கி உலகின் மிகப் பெரிய 'ஜனநாயகம்' சென்று கொண்டுள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில் மத்திய இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையும், இலங்கையில் இன அழிப்புப் போரின் மூலமாக இந்திய மூலதனத்தின் வன்புணர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. மேலும், விலைவாசி உயர்வு, நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்களின் வறுமை, உணவுத் தட்டுப்பாடு, பெட்ரோல் விலையுயர்வு, காஷ்மீர் விடுதலைப் போராட்டம், வடகிழக்கில் கிளர்ச்சி என பல சிக்கல்கள் முன்னுக் வந்துள்ள சூழல் இங்கு கவனிக்கத்தக்கது. மொத்த நாட்டின் பெரும் பகுதி உள்நாட்டு போர் சூழலை நோக்கி சென்று கொண்டுள்ளதையே இவை காட்டுகின்றன.
பசுமை வேட்டையின் முன்னறிவிப்பான சல்வாஜூடுமின் அட்டூழியங்களை அமபலப்படுத்திய 'குற்றத்தி'ற்காக பினாயக் சென் ஒரு வருடம் விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டார். பல மனித உரிமை ஆர்வலர்கள் இதே போல ஒடுக்கப்பட்டனர். பசுமை வேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்திய 'குற்றத்திற்காக' ஹிமேஸு குமார் என்ற காந்தியவாதியின் ஆசிரமம் நொறுக்கப்பட்டது, அவரது உதவியாளர் மீது வழக்கு, சிறைவாசம். லிங்கராம் என்ற பத்திரிகைத் துறை மாணவர் டெல்லியில் படிக்கிறார். அவர்தான் ஆசாத்தின் இடத்தை நிரப்ப இருக்கும் மாவோயிஸ்டு தலைவர் என்று கூறி அவருடன் தொடர்புள்ளவர்கள் என்று அருந்ததி ராய் உள்ளிட்ட பல முக்கிய மனித உரிமையாளர்களை குறி வைத்தது அரசு. இவையனைத்தும் தமக்கு எதிரான எதிர்ப்புகளை அனைத்தையும் மிரட்டி பணிய வைக்கும் தந்திரமாகவே அரசு செய்தது.
இன்னிலையில், இறையாண்மை பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வர உள்ளனர். அத்துடன் பசுமை வேட்டையையும் விரிவுபடுத்தி ராணுவம், விமானப் படையை இறக்கி விரிவானதொரு உள்நாட்டு யுத்தம் தொடுக்க உள்ளனர். எனவே கொஞ்சம் நஞ்ச எதிர்ப்புக் குரல்களையும் கிள்ளியெறியும் தேவை அரசுக்கு உள்ளது. ஒரு பக்கம் சட்டப் பூர்வமாக பாசிசமயமாகி வரும் அரசு, இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அணிகளின் சட்டத்தை மீறிய ரவுடித்தனங்களுக்கு ஆசி வழங்கி சிவில் சமூகத்தையும் பாசிச மயமாக்கி வருகிறது. கர்நாடகா- மாஹாராட்டிரா எல்லைப் பிரச்சினை குறித்து தொலைக்காட்சியில் விவாதிக்க நாக்பூர் சென்ற கர்நாடாக ரக் சன வேதிகே அமைப்பின் தலைவர்(முஸ்லீம்) இந்து பயங்கரவாத- தமிழர் விரோத சிவசெனா ரவுடிகளால் எல்லார் முன்னிலையிலும் தாக்கப்பட்டு காதுகள் கிழிக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டார். ஆர் எஸ் எஸ் ரவுடிகள் தமக்கு எதிரான சிறு குரலையும் தமது குரங்குப் படையை கூட்டிக் கொண்டு சென்று தாக்கி ஒடுக்குகின்றனர். குஜராத்தில் மாவோயிஸ்டு பீதியைக் காட்டி பல பத்து மனித உரிமையார்வளர்கள் கைது. டெல்லியில் தொழில்சங்க தலைவர்கள் மாவோயிஸ்டுகளாக சித்தரிக்கப்பட்டு கைது. மதுரையில் தமிழக அரசுக்கு எதிராக வால்போஸ்டர் அடித்தால் ரவுடி அழகிரியின் மிரட்டல். இந்திய அரசும், சமூகமும் பாசிச மயமாகி வருகிறது. பிணையில் வர இயலாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட போபால் ஆண்டர்சன் பாதுகாப்புடன் விடுதலை, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி தாராசிங், அத்வானி போன்றோருக்கு தண்டனையில்லை, கயர்லாஞ்சி சாதி வெறியர்களுக்கு கரிசனம் - தண்டனைக்குரியவர்களுக்கு அன்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையும் தருகின்ற இன்றைய சூழலில், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு முழுமையாக பாசிச மயமான ஒரு அரசே தேவையாக உள்ளது. சீமானின் கைது சொல்லும் செய்தி இதுதான்.
உலகின் மிகப் பெரிய 'ஜனநாயக' நாட்டின், வசதி படைத்த குடிகளே.. .இதோ உங்களது நாட்டுப்பற்றை விளம்பரப்படுத்த அற்புதமானதொரு வாய்ப்பு. இந்திய அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து களமிறங்குங்கள்.
அசுரன்
உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!









