TerrorisminFocus

Wednesday, May 30, 2007

பற்றி படரும் மறுகாலனிய எதிர்ப்பு போர்!

ந்தியா முழுவதும் மறுகாலனிய திட்டங்களை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்கள் இரண்டு வடிவங்களில் பெரும்பாலும் முன் வருகின்றன. ஒன்று தங்களையே அழித்துக் கொள்வது, அதாவது தற்கொலை. மஹாராஸ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா என்று தொடரும் இந்த தற்கொலை சாவுகள் மறுகாலனியத்தை எதிர்க்கும் மக்களின் ஒரு வகையான மனப்போக்கை காட்டுகின்றன. கரும்பு விவசாயிகளின் தற்கொலை பூமியாக மாறிப் போன வட கர்நாடகவிற்க்கு மோசடி நாடகம் நடத்த சென்ற முதலமைச்சர் குமாரசாமி பின்வருமாறு ஸ்டேட்மென்ட் விட்டார்: "இன்னும் ஒரேயொரு விவசாயி இங்கு தற்கொலை செய்தால் கூட நான் என் பதவியை ராஜினாமா செய்வேன்'.

வானில் ஏறிய அவருடைய ஹெலிகாப்டர் கீழிறங்கும் முன்பாக அங்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார், வழக்கம் போல கள்ளமௌனம் சாதிக்கிறது ஆளும் வர்க்கம். இந்த கோமாளித்தனங்களை செய்வதில் ஆர்வமில்லாத மன்மோகன் சிங் விதர்பாவிற்க்கு சென்றிருந்த அன்றே 8 பேர் கிட்ட தற்கொலை செய்தனர். அது குறித்து கருத்து கூட சொல்லவில்லை சோசலிஸ்டு பொருளாதார நிபுனர், மனிதாபிமானி மன்(னு)மோகன் சிங்.

இன்னொரு வகையான போராட்டமும் இதே இந்தியாவில் கருக் கொண்டு வெளிவரத் துவங்கியுள்ளது. அரசுடன் நேரடியாக மோதுவது அதுவும் ஆயுதம் தாங்கி மோதுவது என்ற வகையீனத்தை சேர்ந்தது அந்த போராட்டம். இந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்னாட்டு இரும்பு ஆலையை எதிர்த்து ஒரிஸ்ஸா கலிங்காநகர் மக்கள் இருமுறை அந்த கம்பேனியின் பிரதிநிதிகளை கடத்தி சென்றுள்ளனர், நந்திகிராமத்தில் மீண்டும் ஒரு மோதல் நடந்தேறியுள்ளது, ரிலையன்ஸை எதிர்த்து ராஞ்சியில் போராடிய சில்லறை வணிகர்கள் நேரடியாக களத்தில் இறங்கி ரிலையன்ஸ் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர், புதுச்சேரியில் தேங்காய்திட்டில் அரசு அலுவலகத்தை தாக்கி நொறுக்கியுள்ளனர் மக்கள். இது தவிர்த்து பஞ்சாப் முதல் பல இடங்களிலும் SEZக்களை எதிர்த்து மக்கள் நேரடியாக அரசு இயந்திரத்தை எதிர்த்து கையில் கிடைத்ததை வைத்து போராடி வருகிறார்கள்.

இவையனைத்தும் எந்த ஒரு அமைப்பும் களத்தில் இறங்கி அணி திரட்டி நடத்திய போரட்டங்கள் அல்ல. இன்னும் சொன்னால் பிரிட்டிஷ் நேரடி காலனியாதிக்கத்தின் கொடுமைகளை எதிர்த்து மக்கள் அனாமத்தாக ஆங்காங்கே போராடி வந்தது போலவே இன்றும் ஆதரித்து வழி நடத்த ஆளின்றி ஆங்காங்கே போராடி வருகின்றனர் மக்கள்.

இந்த சூழலில் மக்கள் நலன் விரும்புபவர்களின் கடமையாக இந்த போராட்டங்களை அமைப்பாக்கி உண்மையான பொது எதிரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி முன் கொண்டு செல்வதாக உள்ளது. போன நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இந்தியா என்ன நிலைமைகளில் இருந்ததோ அதே நிலைமைகள் இன்றும் உள்ளன. ஆனால் போன நூற்றாண்டில் இந்த போராட்டங்களை முன்னெடுத்து செல்ல தவறிய அதே தவறுகளும் தடைகளும் கூட இன்றும் நிலவுவதுதான் வெட்கக்கேடான விசயம்.

அருந்ததிராய் பெங்களூர் வந்த பொழுதும், அதற்கு முன்பு நந்திகிராமத்தில் பாசிச CPM செய்த அட்டுழியங்களை ஒட்டியும் முன் வைத்த கருத்துக்கள் செவ்வுளில் அறைந்தது போல இன்னும் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. "இந்த அரசு ஒரு போலீசு அரசாக மாறிவிட்டது. மக்கள் பிரச்சனைகளுக்கான நியாயமான ஜனநாயாக வழிப்பட்ட போராட்டங்களுக்கான எல்லா கதவுகளையும் இந்த அரசு மூடி அறைந்து சாற்றிவிட்டது. இதன் மூலம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் காஷ்மீர்களையும், வடகிழக்கு மாகணங்களையும் உருவாக்கி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு வன்முறை எல்லா வடிவங்களிலும் வெளிவரும், கிரிமினல்மயமாக, கழிசடைத்தனமாக, புரட்சிகரமாக என்று. இது அரசே உருவாக்கிய ஒரு சூழல். இதற்கு இந்த அரசுதான் முழுப் பொறுப்பேற்க்க வேண்டும்." (அருந்ததிராய் சொன்னதில் ஞாபகத்தில் இருந்ததை வைத்து எழுதுகிறேன்).

இதோ புதுச்சேரி தேங்காய்திட்டு போராட்டம் குறித்த கட்டுரை புதியஜனநாயகத்தில் வந்ததை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன். இதனை பிரசூரித்த தமிழரங்கம் வலைத்தளத்திற்க்கு நன்றிகள்.

***************

அரசின் நிலப்பறி புதுவை மக்களின் போர்க்கோலம்


தேங்காய் திட்டு: அரசின் நிலப்பறி

புதுவை மக்களின் போர்க்கோலம்


விளை நிலங்களைப் பறித்து, பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் துடித்த மே.வங்க போலி கம்யூனிச அரசுக்கு எதிராக, நந்திகிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் இடியோசை ஓயும் முன்பே, அதன் எதிரொலி போல புதுச்சேரி மாநிலத்தில் துறைமுக விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து நிற்கும் தேங்காய்திட்டு கிராம மக்களின் போராட்டம் தொடர்கிறது.

புதுவையில் தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் காங்கிரசு ஆட்சி நடத்தி வருகின்றது. நாடு முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி, நாட்டைப் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றிவரும் காங்கிரசு கும்பல், தாங்கள் ஆளும் புதுச்சேரியில் மட்டும் அதனைச் செயல்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன? பன்னாட்டு ஏகபோக முதலாளிகளே வியக்கும் வண்ணம் நான்கு பகாசுரத் திட்டங்கள் மூலம் புதுவை மாநிலத்தையே கூறுபோட்டு விற்கும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இதன்படி மிகச்சிறிய புதுவை மாநிலத்தில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், இரண்டு துணை நகரங்கள், துறைமுக விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம் என ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை விழுங்கக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கென நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளும் தொடங்கிவிட்டன.

இப்பகாசுரத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் புதுவை மாநில மக்களில் பெரும்பாலோர் வீடிழந்து, நிலமிழந்து, வாழ்விழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் பேரபாயம் நேரிடும். விவசாயமும்விவசாயிகளும், மீனவர்களும்மீன்பிடித் தொழிலும், கடற்கரையும் நீராதாரங்களும் நாசமாகும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

புதுச்சேரி கடற்கரைப் பகுதி அதிக ஆழமில்லாததால், இதுவரை புயல் கரையைக் கடக்காத மாநிலமாக புதுச்சேரி இருந்து வருகிறது. துறைமுக விரிவாக்கம் என்ற பெயரால் 400 மீட்டர் அகலம் 20 மீட்டர் ஆழத்துக்கு மணல் அகற்றப்பட்டால் இனிவரும் காலங்களில் புயல் மிக எளிதில் இப்பகுதியைத் தாக்கும். மேலும், கடற்கரை ஆழப்படுத்தப்பட்டால் கடல்நீரின் அழுத்தம் அதிகரித்து, நிலத்தடி நீரானது முற்றிலும் உப்புநீராகிப் போகும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உப்பு நீரால் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்படும். சரக்குக் கப்பல்களுக்குத் தேவைப்படும் இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் புதுச்சேரியில் உறிஞ்சி எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நிலம் பாலைவனமாகி, அப்பகுதியெங்கும் வெப்பம் அதிகரிக்கும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தின்படி, இலட்சக்கணக்கான டன்கள் அளவுக்கு மலைபோல நிலக்கரி மற்றும் இரும்புக் கழிவுகள் இறக்குமதியாகி குவிக்கப்பட்டால், அதன் துகள்கள் காற்றில் பறந்து மக்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

இத்திட்டங்களால் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, விவசாயிகள் நாடோடிகளாக அலைய வேண்டிய அவலநிலை ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால் தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சூறையாடுவதற்கென்றே உருவாகியுள்ள இத்திட்டங்களால் புதுச்சேரி மாநிலமே சுடுகாடாகிப் போகும். இவற்றைப் படிப்படியாக உணரத் தொடங்கியுள்ள புதுச்சேரி மாநில உழைக்கும் மக்கள், தமது போர்க்குணமிக்க போராட்டங்களால் அம்மாநிலத்தையே அதிர வைத்து வருகின்றனர்.

உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளை சூறையாடலுக்கென்றே "வளர்ச்சி'யின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுள் ஒன்றுதான் துறைமுக விரிவாக்கத்திட்டம். ரூ. 2,600 கோடி மதிப்பிலான இத்திட்டம் ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' என்ற தனியார் கம்பெனியிடம் கடந்த பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தால், ஏறத்தாழ 300 ஏக்கர் விளைநிலங்கள் பறிக்கப்படவுள்ள கிராமம்தான் தேங்காய்திட்டு.
தங்களது வீடும் நிலமும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த இக்கிராம மக்கள், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடினார்கள். வீடுகளில் கருப்புக் கொடியேற்றியும், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை நடத்திய கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்தும் கூட ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று துறைமுகப் பகுதியிலும் அரசு புறம்போக்கு பகுதியிலும் ஆரம்பகட்ட வேலைகளை ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' நிறுவனம் தொடங்கியது. துறைமுகப் பகுதியிலுள்ள நீண்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டதை அறிந்த தேங்காய் திட்டு கிராம மக்கள் ஆவேசமடைந்து, அத்தனியார் நிறுவனத்தின் பெயர் பலகையை உடைத்தெறிந்து, அந்நிறுவனத்தின் அலுவலகத்தைச் சூறையாடினர். பின்னர், துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி பணிகளைத் தொடங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தேங்காய்திட்டு கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.

இத்தனைக்கும் பின்னரும் இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தை காங்கிரசு அரசு கைவிடாத நிலையில், தேங்காய் திட்டு கிராம மக்கள் ""நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு''வைக் கட்டியமைத்து அதன் தலைமையில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கோரியதோடு, அரசைக் கண்டித்து தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து மார்ச் 27ஆம் தேதியன்று துறைமுக விரிவாக்கத்தை கைவிடமறுக்கும் அரசை எதிர்த்து, சட்டமன்றத்தை முற்றுகையிட்டு தமது ரேஷன் கார்டு நகல்களை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இப்போராட்டத்தை ஆதரித்து முதலியார்பேட்டை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் அந்நாளில் அப்பகுதியெங்கும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மார்ச் 27ஆம் நாளன்று தேங்காய்திட்டு கிராம மக்கள் மட்டுமின்றி, வியாபாரிகள், அறிவுத்துறையினர், மாணவர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திரள ஏறத்தாழ 5000 பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி சட்டமன்றத்தை நோக்கி விண்ணதிரும் முழக்கங்களுடன் முன்னேறியது. வழியிலேயே அவர்கள் போலீசாரால் மறிக்கப்பட்டு ஏறத்தாழ 1500 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்தும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் தமது ரேசன் கார்டு நகல்களை தீயிட்டுக் கொளுத்தி முழக்கமிட்டனர்.

மக்களின் உறுதிமிக்க இப்போராட்டங்களைக் கண்டு ஆத்திரமடைந்த துறைமுகத்துறை அமைச்சரான வல்சராஜ், ""எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவோம்; மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்'' என்று மே.வங்க பாசிச முதல்வர் புத்ததேவ் வழியில் சட்டமன்றத்திலேயே கொக்கரித்தார். மேலும் போராடிய மக்களைத் தரக் குறைவான வார்த்தைகளால் ஏசி, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி திமிராகச் சாடினார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த தேங்காய்திட்டு கிராம மக்கள், அமைச்சர் வல்சராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தீர்மானித்தனர். இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இத்திட்டம் கசிந்துவிட, அரண்டுபோன புதுவை அரசு, அமைச்சர் வல்சராஜ் வீட்டுக்கு மூன்று அடுக்கு போலீசு பாதுகாப்பு போட்டது. இதனால் கிராம மக்கள் இம்முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அமைச்சரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடியே ஏப்ரல் 13ஆம் நாளன்று தாரை தப்பட்டைகள் முழங்க, அமைச்சரின் கொடும்பாவியை அலங்கார சவப்பாடையில் ஏற்றி கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பெண்கள் ஒப்பாரி வைக்க, இளைஞர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் இக்கொடும்பாவி பாடையை தூக்கி வந்தனர். தகவலறிந்து முதலியார்பேட்டை போலீசு நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், பெரும்படையுடன் போலீசை திரட்டி வந்து ஊர்வலத்தைத் தடுத்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டினார். ஆவேசமடைந்த பெண்கள் சவத்திற்குத் தெளிக்க வைத்திருந்த மஞ்சள்குங்குமக் கரைசலை ஆய்வாளர் மீது ஊற்றி அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இதற்கிடையே அமைச்சர் வல்சராஜின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அதைத் தடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். இத்தாக்குதலில் 14 பெண்கள் உள்ளிட்டு 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தமது கடமையைச் செய்ய விடாமல் தடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி 257 பேர் மீது போலீசு பொய் வழக்கு போட்டுள்ளது.

இக்கொடுஞ்செயலைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள், போலீசு மிருகங்களை எதிர்த்து முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட ஊர்வலமாகச் சென்றனர். போராடும் மக்களின் கோபாவேசத்தைக் கண்டு பீதியடைந்த போலீசார், முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை உடனடியாக காலி செய்து, துப்பாக்கிகள் மேசை நாற்காலிகள், ஆவணங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பியோடினர். அப்போலீசு நிலையம் பூட்டு போடப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீசாரின் பாதுகாப்பில் விடப்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்டு அரசு எந்திரம் அரண்டுபோய் விக்கித்து நின்றது.

அடுத்த கட்டமாக, மீண்டும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி, மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் எந்தத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாது என்று உறுதியளித்து சமரசம் பேசியதால், தற்காலிகமாக இப்போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேங்காய் திட்டு கிராம மக்களின் போராட்டம் மட்டுமல்ல; சிறப்புப் பொருளாதார மண்டலம், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் ஆகிய திட்டங்களால் விளைநிலங்களைப் பறிகொடுத்த மக்கள் ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடியேற்றுதல், சாலை மறியல் என அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக புதுவை மாநிலமே இத்திட்டங்களுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு நிற்கிறது.

தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கியதும், அரசியல் ஆதாயம் கருதி எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகள் இப்போராட்டங்களை ஆதரித்து அறிக்கைகள் வெளியிடுகின்றன. ""உங்களோடு சேர்ந்து தெருவில் இறங்கிப் போராடுவேன்; பிரதமரை நேரில் சந்தித்து முறையிடுவேன்'' என்றெல்லாம் சீறி வெடிக்கிறார், பா.ம.க. தலைவர் இராமதாசு. புதுவை துறைமுக விரிவாக்கத் திட்டம் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்து முடிவுகளையும் மைய அரசுதான் எடுத்திருக்கிறது. அமைச்சரவையின் முடிவுகளில் மகன் அன்புமணி கையெழுத்திடுகிறார். தந்தையோ இங்கே தாவிக் குதிக்கிறார்.

பா.ம.க. மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சியாக உள்ளபோது மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறிவிட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளையடித்து சூறையாடுவதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லா கட்சி அரசாங்கங்களும் நிறைவேற்றி வருகின்றன. இவையனைத்தும் வெறும் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல; இவை நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்.

சுருக்கமாகச் சொன்னால், விளைநிலங்களையும் வாழ்வுரிமையையும் பறித்து மறுகாலனிய ஆக்கிரமிப்பு எனும் உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள், எதிரிகள். இப்போரை, மக்கள் போரினால் மட்டுமே முறியடிக்க முடியும். எனவே, தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் புதுவை மக்கள், இப்போராட்டங்களை மறுகாலனிய எதிர்ப்புப் போராட்டமாக விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே.வங்கத்தின் நந்திகிராம மக்கள், அப்பகுதியில் அரசு எந்திரம் செயல்பட முடியாமல் முடக்கி வைத்துப் போராடி, அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் துடித்த போலி கம்யூனிஸ்ட் அரசைப் பணிய வைத்ததைப் போல, புதுவை மக்கள் தமது போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் புரட்சிகர சித்தாந்தமும் கொண்ட புதிய போராட்டத் தலைமையின்கீழ் புதுவை மக்கள் போராடும்போது மட்டுமே, இம்மறுகாலனிய ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்க முடியும்; நந்திகிராம மக்களைப் போல எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும். அத்தகையதொரு புரட்சிகரத் தலைமையையும், போராட்டங்களையும் கட்டியமைப்பதே, இன்று போராடி வரும் புதுவை மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது.

பு.ஜ. செய்தியாளர்கள்,
புதுச்சேரி.

1 பின்னூட்டங்கள்:

said...

பாசிஸ்டு கட்சியான CPMயை சேர்ந்த சந்திப்பு என்பவர் வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் சென்று தமது புரளிகளை பேசி வருகிறார்கள். நாமும் நமது பார்வைக்கு வந்த இடங்களிலெல்லாம் நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல எதிர்வினை தொடுத்தே வருகிறோம். அப்படி சமீபத்தில் நண்பி செல்வநாயகி அவர்களினுடைய தளத்தில் நிகழ்ந்த ஒரு எதிர்வினை இங்கு பார்வைக்கு.


@@@@@@@@
சிபிஐ (ML) குறித்து வெகு சுருக்கமாக ஆயுத புரட்சி என்று பேச விழைந்த சந்திப்பு, ஜக்கிய முன்னணி கட்டி ஜனநாயக புரட்சி நடத்த விளைந்த CPM இன்று டாடாக்களுக்கு கூலி வேலை பார்க்க தனது இளைஞர் அணிகளை சிங்கூரிலும், நந்திகிராமிலும் அனுப்பிய பரிணாம வளர்ச்சி குறித்து என்ன சொல்வார்?

நக்சல்பாரி அமைப்பினுடைய ஆரம்ப கால கொள்கைகளும், சமூக வரையறுப்புகளும், வர்க்க எதிரிகள் குறித்த நிலைப்பாடுகளும், செயல் தந்திரங்களிலும் மாற்றம் ஏதுமில்லை. அது அப்படியேதான் உள்ளது. அவற்றை சந்தர்ப்பவாதமாக பயன்படுத்த விளைந்து இடது சாகசவாதத்தில் புகலிடம் தேடியவர்களை குறித்து மட்டுமே பேசுவதன் மூலமும், சித்தாந்த நிலைப்பாடுகள் குறித்து வெகு எச்சரிக்கையாக விலகிச் செல்லும் போக்கை கடைபிடிப்பதன் மூலமும் தப்பிப் போக எண்ணுகிறார் சந்திப்பு.

இந்தியா ஒரு அரை நிலபிரபுத்துவ நாடு என்ற வகையில் வர்க்க பிரிவினைகளின் அளவு என்பது வெகு அதிகமாகவே இருக்கும், அதுவும் சாதி என்ற கோடிகால் பூதத்தின் பிரிவினை பல நூறு ஆண்டுகள் நிலைபெற்ற இந்தியாவில் சமூக பொருளாதார விருப்பக் குழக்களின் பிரிவினை இன்னும் சிறப்பானது, மேலும் ஏகாதிபத்தியத்தின் தாக்குத்ல் இந்த பிரிவினைகளை இன்னும் இன்னும் துண்டு துண்டாக உடைத்து அதிகப்படுத்தும் இயல்புடையது இந்த காரணத்தினாலேயே இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கட்சி உருவாகும் அதிசயம் நடக்கும்.

மற்றபடி மக இக குறித்த அவரது யாரும் நம்ப மறுக்கும் புர்ளிகளை அவரெ தினமும் படித்து திருப்தி பட்டுக் கொள்ளட்டும், சந்திப்புவை திருத்துவது எனக்கு தேவையில்லாத அவசியமில்லாத விசயம் என்பதுடன் ஒரு பாசிச கட்சியின் உறுப்பினருக்குரிய போதை உட்கொண்ட தகுதியை அவர் அடைந்துவிட்டபடியால அதாவது Beyond recoverable அவரிடம் கருத்து மாற்றம் கோரி போராடுவதும் புதிய சிந்தனைகளை ஊன்றுவதும் விரயமே. ஒருவேளை அவரது கருத்துக்கு செல்வாக்கு இருக்கிறது என்றாலாவது அதனை மறுத்து வாதாடி அதனை நம்புப்வர்களை சரி செய்யலாம். அப்படி யாரும் இல்லை. அவரே அவர் சொல்வதை நம்புவதில்லை என்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

நானறிந்த வரையில் ம க இக மக்கள் திரள் வழியில் நம்பிக்கை கொண்டது, மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டுமெனில் அதற்க்கு தயார் என்பதுதான் ம க இகவின் நிலைப்பாடு. மாறாக 'டாடா'க்கள் ஆயுதம் ஏந்தம் வேண்டும் என்பதும், மக்களுக்கு ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அதனாலேயே அவர்களின் அறியாமையின் மீது சவாரி செய்து சட்டமன்றத்தை பிடித்து புரட்சியை மேலிருந்து திணிப்போம் என்று சொல்லும் வலது சந்தர்ப்பவாத கடை கோடி கேட்டை செயல் தந்திரமாக கொண்டுள்ளதுமான CPM(டாடாயிஸ்டு)கள் மக்கள் பங்கு பெறும் புரட்சி குறித்து பேசுவது விந்தையானதே.

இந்த இடத்தில் மக்களை புறக்கணிக்கும் இடது சந்தர்பப்வாதமாகிய வெகு மக்களை அரசியலபடுத்தாதா ஆயுத போராட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை இரண்டுமே(வலது, இடது சந்தர்ப்ப்வாதம்) யாதார்த்தை உள்வாங்கி சீரணிக்கும் தைரியமில்லாத பரவசவாத, குட்டி முதலாளித்துவ பண்பின் விளைவுகளே. ஏனேனில் ஒன்று சரணாகதி அடைந்து சட்டம்ன்றத்தில் சோம்நாத் சாட்டர்ஜி வடிவில் கெஞ்சி, கொஞ்சி, புனிதம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இன்னொன்று சுய அழிவுப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு புரட்சிகர கட்சியின் செயல்பாட்டினுடைய வெற்றி, அது செயல்பட்ட பகுதியில் அது பெற்று தந்த பொருளாதாயமான நன்மைகள் அல்ல. மாறாக அது செயல்பட்ட பகுதியில் மக்களுக்கு சமூக உறவுகளை புரியவைப்பதில் எந்தளவு ஆழமாக சென்றுள்ளது என்பதே ஆகும். இந்த அம்சத்தில் இடது, வலது சந்தர்ப்பவாதத்தை நீங்களே எடை போட்டுக் கொள்ளுங்கள். இவைதான்(வலது, இடது சந்தர்ப்பவாதம்) மார்க்ஸீயம் இன்றைக்கு எதிர் கொண்டுள்ள சித்தாந்த திரிபு எனும் ஆகக் கொடூரமான எதிரி.

SEZக்களையும், விவசாயிகளை நிலங்களை விட்டு விரட்டுவதையும் பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்ற ஒரு வரலாற்று கட்டத்தின் மூலம் நியாயப்படுத்த விளைந்தார்கள் சிலர் அது போல இயந்திரகதியாக ஒரு நாட்டின் அனுபவத்தை இன்னொரு நாட்டுக்கு பொருத்துவது முட்டாள்தனம் என்பதிருக்க அது போன்றதொரு சித்தாந்த முயற்சி கூட செய்யாமல் பஜாக, காங்கிரஸ்விட கேவலமாக மக்கள் மீது தமது இளைஞ்ர் அணி கூலிப் படை கொண்டு படு கோழைத்தனமாக தொடுத்த யுத்தத்தை இன்று வரை நியாயப்படுத்துகிறவர்க்தான், மக்கள் பங்கு பெறும் புரட்சி குறித்து பேசுகீறார். ஒரு வேளை CPMனுடைய சித்தாந்த புத்தகத்தில் மக்கள் என்ற இடத்தில் டாடாக்களும், அம்பானிகளும், பொபால் விசவாயு புகழ் டௌவ் கம்பேனிகளும், இந்தோனிசியாவில் கம்யுனிஸ்டுகளை போட்டுத் தள்ளிய சலீம் குரூப்புகளும் இருப்பர் போல.

புரட்சி, மக்கள், ஜனநாயகம், சமூக மாற்றம், இடது, வலது, சந்தர்ப்பவாதம், திரிபுவாதம், சித்தாந்தத்தில் வர்க்க போராட்டம் இவை குறித்தேல்லாம் மார்க்ஸிய கல்வியை செவ்வெனெ சொல்லிக் கொடுத்தால் CPM கட்சியில் சேர ஆள் இருக்காது. ஏனேனில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் அளவு CPM இன்னும் கெட்டுப் போகவில்லை.

CPM னினால் அதிகபடசம் விழைந்தது என்ன? இந்திய சமூகத்தை புரட்சியிலிருந்து காப்பாற்றும் ஒரு சேப்டி வால்வாக பயன்படுவதுடன் இல்லாமல். போராட்டம் குறித்து மக்களுக்கு அலுப்பை ஓட்டி விரட்டி விடும் வேலையை செய்வதோடல்லாமல்,. மக்களுக்கு பிழைப்புவாதத்தை கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த ஒட்டு மொத்த செயல்பாட்டில் பாசிச ச்க்திகள் கட்டுபாடின்றி வளர்கின்றன் என்பது மட்டும்தான் முக்கியமான இவர்களின் சாதனையாக இருக்கீறது.
(ஏனேனில் உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் மக்கள் அந்த கட்சியை தோல்வியுறச் செய்கிறார்கள். எல்லாக் கட்சிகளும் அதனையே நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே ஒரு தடவை காங்கிரஸ் எனில் மறூமுறை பாஜாக வலுப்பெறுகீறது. இப்படி தொடர் போக்கில் பாசிச சக்தி தனது வலுவை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொள்கிறது. இதற்க்கு உடந்தையாக இருப்பதைத்தான் அதாவது பஜாகா உள்ளிட்ட அத்தனை ஏகாதிபத்திய தாசர்களுக்கு சாவு மணியடிப்பதை தடுத்து அவர்கள் மூச்சு விட புகலிடம் கொடுக்கும் வரலாற்று கடமை செய்வதைத்தான் சந்திப்பு உள்ளிட்ட போலி கம்யுனிஸ்டுகள் மத சார்பின்மை என்றும், பாசிசத்திலிருந்து இந்தியாவை பாதுகாக்கிறோம் என்றும் சொல்லி வருகிறார்கள். பாசிஸ்டுகளே கூட இவர்களை தமது முதல் எதிரிகளாக அறிவிக்கவில்லை எனும் போதே இவர்களின் செய்ல்பாடுகளின் விளைவு என்னவென்பதை புரிந்து கொள்ள ஏதுவாகிறது.)

இது தவிர்த்து இந்தியாவில் கேரளா விவசாயிகள் தற்கொலை சாவில் மூன்றாம் இடத்தில் இருப்பதும், மே வாவில் தேயிலை தோட்டங்களில் பட்டினி சாவுகள் நடப்பதும் CPM சாதித்து இன்ன பிற சொல்லிக் கொள்ளும் படியான மக்கள் பங்கு பெற்ற புரட்சிகளாகும்.

அரசு எந்திரத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி அரசு என்பதின் இயல்பை இழக்க செய்யும் பண்பாட்டு புரட்சி என்ற மிக மிக மிக மிக முக்கியமான ஒரு புரட்சி உள்ளது. அது குறித்து CPM ன் செய்லதிட்டம் என்ன? அந்த அம்சத்தில் இவர்கள் கேரளாவில், மேவாவில் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளனர்? ஒன்றும் கிடையாது. மாறாக அரசு இயந்திரத்தை எப்படி வெகு விமரிசையாக மக்கள் மீது வன்முறை செலுத்த பயன்படுத்தலாம என்று பிற வோட்டுக் கட்சிகளுக்கு கற்றுத் தரும் குருவாக மாறியுள்ளனர்.

இங்கு புரட்சி குறித்த மாலனின் பெரும்பாலான கருத்துக்களின் எனக்கு உடன்பாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

@@@@@@@@@

Related Posts with Thumbnails