TerrorisminFocus

Friday, July 18, 2008

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!
புதிய கலாச்சாரம்
Wednesday, 16 July 2008 21:22

1967இல் நக்சல்பாரி பேரெழுச்சியின்போது ஆளும் வர்க்கத்தின் கேடயமாகச் செயல்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி, கடந்த 30 ஆண்டுகளில் ஆளும் வர்க்கத்தின் வாளாகப் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. நந்திகிராம் அதற்கு ஒரு நாடறிந்த எடுத்துக்காட்டு. மார்க்சிஸ்டுகளின் துரோகத்தை எங்கெல்லாம் மக்கள் எதிர்க்கிறார்களோ, எங்கெல்லாம் புரட்சியாளர்களின் அரசியல் நடவடிக்கைகளால் இவர்கள் அம்பலமாகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் படுகொலைகளை நிகழ்த்த மார்க்சிஸ்டுகள் தயங்குவதில்லை. விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போன மார்க்சிஸ்டு கட்சிக் காலிகள் அங்கே ஒரு அரசியல் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் காரப்பட்டு இராசேந்திரன் (45) கொலை செய்யப்பட்டார். அரிவாளும் இரும்புத் தடிகளும் ஏந்திய சுமார் 16 பேர் கொண்ட கொலைக்கும்பல், நிராயுதபாணியான இராசேந்திரனைச் சுற்றி வளைத்துக் கொண்டு வெட்டிக் கொலை செய்திருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என விவசாயிகள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் அனைவரையும் அந்தக் கொலைவெறிக் கும்பல் தாக்கியிருக்கிறது. வீடுகளைச் சூறையாடி, நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்திருக்கிறது.

இந்தப் படுகொலை தற்செயலாக நிகழ்ந்து விடவில்லை. மொத்தத் தாக்குதலையும் மார்க்சிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைமை திட்டமிட்டு ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறது என்பதை நடைபெற்றுள்ள சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

காரப்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் பெரும்பான்மையினர் வி.வி.மு.வைச் சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்டு கட்சிக்கு ஆதரவான சுமார் 20,30 குடும்பங்கள் சற்றுத் தள்ளியிருக்கும் மேட்டுத்தெரு என்ற பகுதியில் வசிக்கின்றனர். இதே மேட்டுத் தெருவிலும் வி.வி.மு. விற்குப் பல ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வி.வி.மு. தோழர்களைத் தாக்குவதோ கொலை செய்வதோ கடினமென்பதால் உரிய தருணத்திற்காகக் காத்திருந்திருக்கின்றனர் மார்க்சிஸ்டு குண்டர்கள்.

வி.வி.மு.வுக்கு ஆதரவான கூலி விவசாயிகள் கரும்பு வெட்டும் வேலைக்காக ஒரு வாரம் பத்து நாட்கள் வெளியூர் செல்வது வழக்கம். ஜூன் 19ஆம் தேதியன்று அவர்களில் சுமார் 30 பேர் கரும்பு வெட்டும் வேலைக்காக வெளியூர் கிளம்பி விட்டனர். எப்போது கிளம்புவார்கள் என்று காத்திருந்த மார்க்சிஸ்டு கொலைகாரர்கள், வி.வி.மு.வின் அமைப்பாளர் ஏழுமலையை 20ஆம் தேதியன்று கொலை செய்வது என்று முடிவு செய்திருக்கின்றனர். வீடுகளில் ஆட்கள் அதிகமில்லாத மாலை நேரத்தையும் அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எந்த இடத்தில் கொல்வது என்றும் திட்டமிட்டு அந்த இடத்தை நோக்கி ஏழுமலையை இழுப்பதற்காகவே ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கின்றனர்.

மாலை சுமார் 5 மணியளவில் மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன், ராமு ஆகியோர் தங்களது கொடிக்கம்பத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு தெருவில் போய்க்கொண்டிருந்த பாலு என்ற வி.வி.மு. ஆதரவாளரின் மகனிடம் வம்பிழுத்து அவரைத் தாக்கியிருக்கின்றனர். அருகாமை வீட்டிலிருந்த ஒரு பெண் இதனைப் பார்த்துக் கூச்சலிட்டிருக்கிறார். கூட்டம் கூடிவிட்டது.

வெங்கடேசன் ரவுடித்தனமாக நடந்து கொள்ளவே கைகலப்பாகியிருக்கிறது. மறுகணமே மயங்கி விழுந்ததைப் போல நடித்திருக்கிறான் வெங்கடேசன். அச்சமயம் வேறோரு வேலையாக மேட்டுத் தெருவிற்குச் சென்றிருந்த ஏழுமலை, சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு உடனே அந்த இடத்தை நோக்கி விரைந்திருக்கிறார்.
மேட்டுத்தெருவில் ஏழுமலையை வெட்ட முயன்றால் அங்கிருக்கும் வி.வி.மு. ஆதரவாளர்கள் தடுத்து விடுவார்கள் என்பதால், அவர் வரும் பாதையில் உள்ள ஒரு ஆளில்லாத இடத்தைக் கொலைக்களமாகத் தெரிவு செய்து, அங்கே சுப்பராயன் என்ற மார்க்சிஸ்டு கட்சிக்காரனின் வீட்டில் ஆயுதங்களுடன் தயாராகக் காத்திருந்த கொலைக் கும்பல், ஏழுமலை வருவதைப் பார்த்ததும் கையொலி எழுப்பி "சிக்னல்' கொடுத்திருக்கின்றது. அதுவரை மயங்கியவனைப் போல நடித்த வெங்கடேசன் உடனே எழுந்து ஏழுமலையை நோக்கி ஓடிவர, கொட்டகையில் பதுங்கியிருந்த கும்பலும் வீச்சரிவாள், இரும்புத் தடிகளுடன் ஏழுமலை மீது பாய்ந்தது.

10 பேர் ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கவே, தற்காப்புக்காக வயலில் குதித்து கையிலிருந்த சிவப்புத் துண்டை வீசி மக்களை அழைத்தபடியே தன்னுடைய தெருவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார் ஏழுமலை. மக்கள் ஆத்திரத்துடன் திரண்டு விட்டனர். ஏழுமலை வீட்டுக்கு 3 வீடு தள்ளிக் குடியிருக்கும் இராசேந்திரன், ""வெட்டுக் குத்தெல்லாம் வேண்டாம், நான் போய் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன்'' என்று நிராயுதபாணியாக அந்தக் கொலைக்கும்பலை நோக்கி, தடுத்தும் கேளாமல், ஓடியிருக்கிறார். ஏழுமலையின் மகனும், மல்லிகா என்ற பெண்ணும், அவரது மகனும், சிறுவர்களும், மூதாட்டிகளும், பிறரும் அவரது பின்னாலேயே ஓடியிருக்கின்றனர்.

சமாதானம் செய்வதற்காக இராசேந்திரன் கைகளை உயர்த்த, அந்தக் கைகளைக் கண்ட துண்டமாக வெட்டியிருக்கின்றனர். பிறகு அவர் தலையில் இறங்கியது அரிவாள். அடுத்து மல்லிகாவின் மகனை வெட்டுவதற்கு அந்தக் கும்பல் அரிவாளை ஓங்கியவுடன், ஆனது ஆகட்டும் என்று அரிவாளைத் தடுத்துப் பிடுங்கியிருக்கிறார் மல்லிகா. உடனே இரும்புக் குழாயினால் ஏழுமலையின் மகனைத் தாக்கியிருக்கின்றனர். 6 வயது சிறுவன், 13 வயது சிறுமி, 65 வயது மூதாட்டி.. என யாரும் அவர்களுடைய தாக்குதலுக்குத் தப்பவில்லை. இதற்குள் ஏழுமலையுடன் மக்கள் கூட்டம் வருவதைக் கண்டு ஓட்டம் பிடித்திருக்கிறது அந்தக் கொலைக்கும்பல்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராசேந்திரனை உடனே ஒரு கட்டிலில் கிடத்தி அங்கிருந்த தோழர்கள் துணையுடன் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முயன்றிருக்கிறார் ஏழுமலை. தூக்கிச் சென்ற அந்தத் தோழர்கள் மீதும் ஒளிந்து கொண்டு கல்லெறிந்திருக்கிறார்கள் அந்தப் பேடிகள். எதிர்த்தாக்குதல் தொடுத்தபடியே இராசேந்திரனை விழுப்புரம் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள் தோழர்கள்.

அவர்கள் ஊரிலிருந்து அகன்ற மறுகணமே அருகாமையில் உள்ள அரசூரில் தயாராகக் காத்திருந்த தங்களது ஆட்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது அந்தக் கொலைக்கும்பல். அங்கிருந்து 2 ஷேர் ஆட்டோக்களில் வந்திறங்கிய மார்க்சிஸ்டு காலிகள், மேட்டுத் தெருவில் இருந்த வி.வி.மு. ஆதரவாளர்களின் வீடுகளில் புகுந்து அங்கிருந்த முதியவர்களையும் பெண்களையும் தாக்கியிருக்கின்றனர். வீடுகளை அடித்து நொறுக்கியதுடன், 27 பவுண் நகைகள், சிறுமிகளின் கொலுசுகள், சுமார் ரூ. 50,000 பணம், டி.வி., சூட்கேஸ் போன்ற பொருட்களனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

இந்தக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் உள்ளூர் செயலர் ராசுக்கண்ணு உள்ளிட்ட கொலைகாரர்கள் தப்பித் தலைமறைவாகி விட்டனர்.

வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே தயாராகக் காத்திருந்த மார்க்சிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலர் ஆனந்தன், அவர்களை ஆஸ்பத்திரியில் படுக்கவைக்க ஏற்பாடு செய்துவிட்டு, "வி.வி.மு. ஆட்கள் 10 பேர் தங்களது தோழர்களைக் கொலை செய்ய முயன்றதாக' முன்கூட்டியே தயாராக எழுதி வைத்திருந்த பொய்ப்புகாரை முதல் புகாராகத் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திலும் கொடுத்திருக்கிறார்.

விழுப்புரம் மருத்துவமனை கைவிரித்து விட்டதால், அபாயகரமான நிலையில் சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இராசேந்திரன், வழியில் திண்டிவனத்திலேயே இறந்துவிட்டார்.

இச்செய்தியறிந்த மக்கள், மார்க்சிஸ்டு காலிகளின் வீடுகளை நோக்கிக் கூட்டமாகச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கே யாரும் இல்லை. ஓடிப்போன அந்தக் கிரிமினல்கள் தமது வீடுகளைத் தாமே சேதப்படுத்தி பொய் வழக்குக்கான தடயத்தையும் உருவாக்கி வைத்துவிட்டே ஓடியிருந்தனர். சிறிது நேரத்தில் "அமைதியை' நிலைநாட்ட பெரும் போலீசுப் படை அங்கே குவிக்கப் பட்டுவிட்டது.

···

கொலை செய்யப்பட்ட இராசேந்திரன் ஒரு பண்ணையாரோ, பணக்காரரோ, சமூக விரோதியோ அல்ல. அவர் ஒரு கரும்பு வெட்டும் தொழிலாளி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். 5 பெண் பிள்ளைகளையும், ஒரு மூளை வளர்ச்சி குன்றிய ஆண் பிள்ளையையும் பெற்றுவிட்டு அவர்களை ஆளாக்குவதற்காக உழைத்துத் தேய்ந்து கொண்டிருந்த ஒரு சாதாரண ஏழை விவசாயி. எல்லாக் கட்சியினருடனும் சுமுகமாகப் பழகும் இயல்புள்ளவர்.

அவர் துவக்கம் முதலே விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் சொந்தக் காரணங்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் வி.வி.மு.விலிருந்து விலகினார். சிறிது காலம் கழித்து தே.மு.தி.க.வில் இணைந்தார். இருப்பினும் உள்ளூர்ப் பிரச்சினைகளில் வி.வி.மு. வின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்தார். தனிப்பட்ட முறையிலும் நியாயமானவர் என்ற நற்பெயரை மக்கள் மத்தியில் பெற்றிருந்தார்.

வி.வி.மு. வை ஆதரித்தார் என்ற ஒரு குற்றத்துக்காகப் பண்ணையார்களோ சாதி ஆதிக்க வெறியர்களோ கூட ஒருவரை சர்வசாதாரணமாக இப்படிப் படுகொலை செய்துவிடுவதில்லை. ஆனால் கொலை செய்வதற்கு இந்த ஒரு காரணமே போதுமானதென்று மார்க்சிஸ்டுகள் கருதியிருக்கிறார்கள்.

கொலைக் குற்றவாளியான வெங்கடேசனுக்கு வேலையும் வாங்கித் தந்து, பெண் பார்த்துத் திருமணமும் செய்து வைத்தவர்தான் இராசேந்திரன். அந்த உரிமையில் அவனைக் கண்டித்துத் திருப்பி அனுப்ப முடியும் என்று அவர் திடமாக நம்பியிருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கை பொய் என்பது முதல் வெட்டு விழுந்த பின்னர்தான் அவருக்குப் புரிந்திருக்கிறது. ""அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, வேணாண்டா, என்ன வெட்டாதீங்கடா'' என்று கதறியிருக்கிறார். தலையில் அரிவாள் இறங்கியவுடன் அந்தக் கதறலும் நின்றுவிட்டது.

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்! கம்யூனிஸ்டுகளின் சின்னமான அரிவாளுக்கும் சுத்தியலுக்கும் இந்தப் போலிகள் உருவாக்கியிருக்கும் புதிய அர்த்தம் இது.

···

இது ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை. ஜூன் 14ஆம் தேதி மார்க்சிஸ்டுகள் காரப்பட்டில் நடத்திய கூட்டத்தில் வி.வி.மு.வுக்கு எதிராகப் பொய்களையும் அவதூறுகளையும் நஞ்சாகக் கக்கியதுடன் "வி.வி.மு. வை ஒழித்துக் கட்டுவோம்!' என்று பிரகடனமும் செய்திருக்கிறார்கள். மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் ஏழுமலையைக் கொல்வோமென்பதை மறைமுக அறிவிப்பாகவே வெளியிட்டிருக்கிறான் பகுதிச் செயலர் ராசுக்கண்ணு. இந்தக் கொலைவெறித் தாக்குதலையும், கொள்ளையையும் மாவட்டக் கமிட்டி நுணுக்கமாகத் திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறது. இந்தக் கொலைத் திட்டத்தின் முன் தயாரிப்புகளை காரப்பட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்டிருக்கிறார் மாவட்டச் செயலர் ஆனந்தன்.
போலீசுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் இடையே நிலவும் தொழில்முறைக் கூட்டினை திருவெண்ணெய் நல்லூர் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகள் தெளிவாக நிரூபித்தன.

கொலையை நேரில் பார்த்த மல்லிகா, புகார் கொடுப்பதற்காக அன்றிரவு 11.30 மணிக்கு காவல் நிலையத்திற்குச் சென்ற போது, கொலைகாரனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே மல்லிகாவிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் இன்ஸ்பெக்டர். ""ரெண்டு பேர்தான் வெட்டினதா வெங்கடேசன் சொல்றான், நீ என்னம்மா இவ்வளவு பேர் சொல்ற'' என்று கூறி, மல்லிகாவின் புகாரை வெங்கடேசன் முன்னிலையிலேயே நிராகரித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் இராசேந்திரன். கொள்ளை குறித்த புகாரையும் பதிவு செய்ய முடியாதென போலீசு மறுத்திருக்கிறது.

இன்ஸ்பெக்டரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் "பணப் பட்டுவாடா' முடிந்து விட்டதை நிரூபித்தன. கொலை வழக்குச் செலவுக்கு, கொள்ளையடித்த பணம்! இது மார்க்சிஸ்டுகளின் கிரிமினல் மூளை கண்டிருக்கும் வளர்ச்சிக்குப் புதியதொரு சான்று!

மறுநாள் காலையில் ""கொலைகாரர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யாவிட்டால் இராசேந்திரனின் பிணத்தை வாங்கமாட்டோம்'' என்று விழுப்புரம் மருத்துவமனை முன் போராடினார்கள் வி.வி.மு. தோழர்கள். அதன் பின்னர்தான் கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் 7 பேர் சேர்க்கப்பட்டனர். ஆனால் இதனை ஈடுகட்டும் விதத்தில் வி.வி.மு. தோழர் ஏழுமலை உள்ளிட்ட 19 பேர் மீது கொலைமுயற்சி, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்துவிட்டது போலீசு.

தற்போது ஏழுமலை உள்பட 3 தோழர்கள் சிறையில் உள்ளனர். கொலைகாரர்களும் 3 பேர்தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மற்ற 4 கொலைகாரர்களை போலீசு "தேடி'க்கொண்டிருக்கிறதாம்! போலீசைப் பொருத்தவரை இந்தக் கொலை நக்சல்பாரி அமைப்பினரை ஒடுக்குவதற்குக் கிடைத்த வரப்பிரசாதம். இலஞ்சமும் கொடுத்து, ஆள்காட்டி வேலைஅடியாள் வேலைகளை இலவசமாகவும் செய்து தருகின்ற மார்க்சிஸ்டுகளின் சேவையில் புல்லரித்துப் போய் நிற்கிறது போலீசு நிர்வாகம்.

வி.வி.மு.வின் சார்பில் விழுப்புரத்தில் ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வாயிலாக "மார்க்சிஸ்டுபோலீசு கூட்டணி' மாவட்டம் முழுவதும் அம்பலமாகியிருக்கிறது.

எனினும், மார்க்சிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்டக் கமிட்டி இதுவரை இக்கொலை குறித்து வாய் திறக்கவில்லை. காரப்பட்டு கிராமத்தைப் போலீசு இராச்சியமாக்கி, மக்களை மிரட்டிப் பணிய வைத்துவிட்டால், பின்னர் அங்கே தங்களது ஆட்சியை மெல்ல மெல்ல நிறுவி விடலாம் என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் மனக்கணக்கு.

"காதலிக்க மறுக்கும் பெண்ணைக் கடத்திச் சென்று கற்பழித்துவிட்டால் பிறகு தாலி கட்டி விடலாம்' என்று தமிழ் சினிமா வில்லனைப் போல அவர்கள் சிந்திக்கிறார்கள். லும்பன்கள், பிழைப்புவாதிகளை உறுப்பினர்களாகவும், கிரிமினல்களைத் தலைவர்களாகவும் கொண்டுள்ள ஒரு கட்சி வேறு எப்படிச் சிந்திக்கும்? நந்திக்கிராமில் வெளிப்பட்டது வெறும் வன்முறையல்ல, அதுதான் "மார்க்சிஸ்டு மூளையின்' சிந்தனை முறை என்பதற்கு காரப்பட்டு இன்னுமொரு சான்று.

···

நக்சல்பாரி எழுச்சியைக் காட்டிக் கொடுத்த மார்க்சிஸ்டு தலைமையை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறி மா.லெ. இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட (மறைந்த) தோழர் ரங்கனாதனின் கிராமம் காரப்பட்டு. சுற்றுவட்டார நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி அவற்றின் ஊடாக உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை அவர் உருவாக்கி வளர்த்திருக்கும் கிராமம் அது.

தலித் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான கலவரங்கள் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற காலங்களிலும் கூட சாதிவெறி தலைதூக்காத கிராமம் காரப்பட்டு. உள்ளூர் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த தலித் மக்களைத் திரட்டி வெற்றிகரமானதொரு கோயில் நுழைவுப் போராட்டத்தை வி.வி.மு. நடத்திய கிராமம் அது. அப்போராட்டத்தின் விளைவாக நிலைநாட்டப்பட்ட தலித் மக்களின் கோயில் நுழைவு உரிமையை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் கிராமம்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு தலித் மக்களும் பிற சாதியினரும் ஒருவரையொருவர் அழைப்பதையும் ஒரே பந்தியில் அமர்ந்து கலந்துண்பதையும் தனது பண்பாடாகவே மாற்றிக் கொண்டிருக்கும் கிராமம். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்களை அழைப்பதும், அவர்கள் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதும், வி.வி.மு. நடத்தும் ஊர்க்கூட்டங்களில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் வழமையாக நடைபெற்று வரும் கிராமம் அது.

தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போவதில்லை. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட பெரிதும் வாய்மொழியின் அடிப்படையிலேயே நடைபெறும் அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையும் நேர்மையும் நிலவி வரும் கிராமம் அது. கள்ளச்சாராய விற்பனை அங்கே நெடுநாள் முன்னரே ஒழிக்கப்பட்டுவிட்டது. குடித்துவிட்டுத் தெருவில் ஆடுவதும், பொது இடங்களில் புகை பிடிப்பதும் அங்கே தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து விடவில்லை. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத்தப்படுகின்றன. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய பிழைப்புவாதிகளும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட லும்பன்களும் இவற்றை எதிர்க்கத்தான் செய்தனர். தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பதை அந்தக் கிரிமினல்கள் புரிந்திருந்தார்கள். மார்க்சிஸ்டு கட்சியோ அவர்களை வாரி அணைத்துக் கொள்ளத் தயாராக இருந்தது.

ஆனால் இந்தக் கிரிமினல் கும்பல் ஒரு கட்சியாகத் திரளுவதை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை. மார்க்சிஸ்டு கட்சி கொடிக்கம்பம் ஊன்றுவதையே மக்கள் அனைவரும் (எல்லா சாதியினரும்) திரண்டு நின்று எதிர்த்தார்கள். ""நாலு பேராக இருந்தாலும் அது அவர்களது ஜனநாயக உரிமை'' என்பதை மக்களுக்கு விளக்கிக் கூறி கொடிமரம் ஊன்றும் உரிமையை அன்று மார்க்சிஸ்டுகளுக்கு வாங்கிக் கொடுத்தவரே வி.வி.மு. தோழர் ஏழுமலைதான். ஆயினும் கொடிதான் ஊன்ற முடிந்ததே தவிர, அவர்களுடைய கட்சி அங்கே காலூன்ற முடியவில்லை.

ஊர்ப் பொதுச்சொத்தைத் திருடித் தின்பது, கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது, நகரத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, தட்டிக் கேட்டால் குடித்து விட்டுத் தகராறு செய்வது, பிரச்சினை முற்றினால் சென்னைக்கு ஓடிவிடுவது, மீண்டும் வந்து வம்பு வளர்ப்பது.. இவைதான் காரப்பட்டில் மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் ஆற்றிய கட்சிப்பணிகள். இத்தகைய கட்சிப்பணிகளின் மூலம் களவாணிகளை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது.
இவை ஒவ்வொன்றிலும் வி.வி.மு. தலைமையிலான மக்களின் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போதைய கொலைக் குற்றவாளி வெங்கடேசன் கள்ளச்சாராயம் விற்க முயன்று ஊர்மக்களால் விரட்டியடிக்கப்பட்டவன். பிறகு கருமாதிக் கொட்டகையின் இரும்புக் குழாயைத் திருடியபோது வி.வி.மு. தோழர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டவன். இவனும் இவனது "தோழர்களும்' கரண்டு கம்பி திருடிப் பிடிபட்ட வழக்கோ நிலுவையில் இருக்கிறது. இவைதான் மார்க்சிஸ்டுகள் அங்கே ஆற்றிய மக்கள் சேவைகள்.

தங்களது "மக்கள் சேவையை' வி.வி.மு.வின் தலையீடின்றி தொடர வேண்டுமெனில், ஊராட்சித் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று கணக்குப் போட்டுத் தேர்தலிலும் போட்டியிட்டுப் பார்த்தனர். அதிலும் தோல்வியையே கண்டனர்.

தாழ்த்தப்பட்டோருக்கான தொகுப்புவீடு கட்டும் திட்டம் வந்தது. தலைக்கு ரூ. 3000 கொடுத்தால் உடனே முடித்து விடலாம் எனக் கூறி மக்களிடம் வசூல் செய்ய முனைந்தனர். ""இலஞ்சம் கொடுக்காமல் தொகுப்பு வீட்டைப் பெறுவோம்'' என்று வி.வி.மு. மக்களை ஒன்று திரட்டியது. "நக்சலைட்டுகள் மக்கள் நலத்திட்டத்தை தடுக்கிறார்கள்' என்று கூச்சல் போட்டுப் பார்த்தார்கள் மார்க்சிஸ்டுகள்; எடுபடவில்லை. இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள். அதன் விளைவுதான் இந்தக் கொலைவெறி!

சிந்தித்துப் பாருங்கள்! நிலப்பட்டாவுக்கும், ரேசன் கார்டுக்கும், தொகுப்பு வீட்டுக்கும் மக்கள் இலஞ்சம் கொடுக்க மறுக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆத்திரப்படலாம். மார்க்சிஸ்டுகளுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? எந்தக் கேசும் ஒரு ஊரிலிருந்து வரவில்லை என்றால் அந்த ஊரில் "அரசியல் சட்டத்தின் ஆட்சி' நடைபெறாதது குறித்து போலீசுக்காரன் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்சிஸ்டு கட்சிக்காரனுக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

ஏனென்றால் மக்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும், மக்களுக்கும் போலீசுக்கும் இடையில் தரகுவேலை பார்ப்பதுதான் அவர்கள் ஆற்றிவரும் கட்சிப்பணி. மக்களிடம் இலஞ்சம் வசூலித்து அதிகாரவர்க்கத்துக்குப் பங்கு பிரித்துக் கொடுத்து விட்டு, அதில் கொஞ்சம் புறங்கையை நக்கிக் கொள்ளும் வேலையை திமுக, அதிமுக வின் வட்டம்மாவட்டங்கள் மட்டும் செய்யவில்லை. அதே வேலையைத்தான் போலி கம்யூனிஸ்டுகளும் செய்கிறார்கள். நக்கும் அளவிலும், போட்டிருக்கும் துண்டின் நிறத்திலும் மட்டும்தான் வேறுபாடு!

ஓட்டுனர் உரிமம் வாங்க ஆர்.டி.ஓ. ஆபீசுக்குப் போகும் மக்களுக்கு அங்கிருக்கும் புரோக்கர்கள் என்ன சேவையைச் செய்கிறார்களோ அதே "சேவை'யைத்தான் மார்க்சிஸ்டுகள் மக்களுக்குச் செய்கிறார்கள். அந்த புரோக்கர்கள் தங்களது சேவையைச் சொல்லி மக்களிடம் ஓட்டுக் கேட்பதில்லை; போலிகள் ஓட்டுக் கேட்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

மக்கள் போராட்டங்களையும் தாங்கள் பொறுக்கித் தின்பதற்கான கருவியாக மாற்றிக் கொண்டவர்கள் போலி கம்யூனிஸ்டுகள். கூலி உயர்வுக்காகத் தொழிலாளிகள் போராடும்போது தொழிலாளிகளின் கோபத்தைக் காட்டி முதலாளிகளிடம் கமிசன் பார்க்கிறார்கள். உள்ளூர் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பிரச்சினைகள் வரும்போது, பத்தே பத்து சுவரொட்டியும் துண்டுப்பிரசுரமும் அச்சடித்து அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் "பத்திரிக்கை' வைக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து காதும் காதும் வைத்தாற்போல நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தையிலும் காசு பார்க்கிறார்கள்.

வேறு என்ன விதத்தில் கட்சிப் பணி ஆற்ற முடியும் என்பதை உண்மையிலேயே அவர்கள் அறியமாட்டார்கள். அரசியல் போராட்டம், வர்க்கப் போராட்டம் என்பது பற்றியெல்லாம் கார்த்திக் கட்சிக்காரனுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் இந்த காரத் கட்சிக்காரர்களுக்கும் தெரியும். அதனால்தான் காரப்பட்டின் கிரிமினல்கள் தங்களை வழிநடத்த வல்லது மார்க்சிஸ்டு கட்சியே என்பதைக் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இலஞ்சத்தில் ஊறிய அரசு ஊழியர்கள், சாதிவெறியர்கள், சமூக விரோதிகள், முதலாளிகளின் கையாட்களான தொழிற்சங்கத் தலைவர்கள்.. இவர்களெல்லாம் அங்கே "தோழர்கள்'. "நான் முதலில் பார்ப்பான் அப்புறம்தான் கம்யூனிஸ்டு' என்று பிரகடனம் செய்யும் அமைச்சர், பேரனுக்கு பூணூல் கல்யாணப் பத்திரிக்கை வைக்கும் சபாநாயகர், கொலைகார சங்கராச்சாரியை அரசு விருந்தினராக உபசரிக்கும் அச்சுதானந்தன், "அத்வானி என் நெருங்கிய நண்பர்' என்று அறிவிக்கும் புத்ததேவ்.. இவர்களெல்லாம் தலைவர்கள்.

அடி முதல் நுனி வரை அழுகிப்போன இந்தக் கட்சி அம்பானிக்கும் டாடாவுக்கும் அடியாள் வேலை பார்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

"தேர்தல் பாதையா, வன்முறைப் பாதையா?' என்பதுதான் நமக்கும் நக்சலைட்டுகளுக்கும் உள்ள வேறுபாடு என்று அவர்கள் கூறுகிறார்கள். இல்லை, "ஆளும் வர்க்க அடிவருடித்தனமா, புரட்சியா?' என்பதில்தான் வேறுபாடு. "வன்முறையை யாருக்கெதிராகப் பயன்படுத்துவது?' என்பதில்தான் வேறுபாடு.

சமீபத்தில் டெல்லியிலுள்ள மார்க்சிஸ்டு கட்சியினுடைய தலைமையகத்தில் புகுந்து மத்தியக் கமிட்டி உறுப்பினர்களையே தாக்கினார்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள். ஆனால் நந்திகிராமிலும் சிங்கூரிலும் மக்களுக்கு எதிராக "ஆயுதப்போராட்டம்' நடத்திய மார்க்சிஸ்டுகள், பாரதிய ஜனதாவுக்கு எதிராகத் தம் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. மதுரையில் லீலாவதி கொலை, சாத்தூரில் கள்ளச்சாராய முதலைகளுக்கு எதிராகப் போராடிய தோழர் கொலை, திருப்பூரில் சாதிவெறியர்களை எதிர்த்த தோழரின் படுகொலை.. என நேர்மையான தோழர்களையெல்லாம் எதிரிகளின் அரிவாளுக்குக் காவு கொடுத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

இராசேந்திரனுக்கும் ஏழுமலைக்கும் எதிராக உயர்ந்த அவர்களுடைய அரிவாள், தங்களது தோழர்களைக் கொன்ற கொலைகாரர்களுக்கு எதிராக உயர்ந்ததில்லை. உத்தப்புரம் சாதிவெறிச் சுவரின் பத்து செங்கற்களைத் தட்டி விடுவதற்கு போலீசுப்படை வரும்வரை காத்திருந்தார்கள் மார்க்சிஸ்டுகள். ஆனால் காரப்பட்டில் தலித் விவசாயிகளின் வீடுகளைச் சூறையாடுவதற்கு மட்டும் அவர்களுடைய கைகள் தயங்கவேயில்லை.

ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு மொட்டை போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம்! புரட்சியாளர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப்போராட்டம்! இதுதான் மார்க்சிஸ்டு கட்சி!

ஆம். இவர்கள் சிவப்புப் போர்வை போர்த்திய பாசிஸ்டுகள். சமாதானம் பேச வந்த இராசேந்திரனை, ""அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, என்னக் கொல்லாதீங்கடா'' என்று நிராயுதபாணியாக நின்று மன்றாடிய அந்த ஏழை விவசாயியை, ஈவு இரக்கமின்றி வெட்டியது மார்க்சிஸ்டுகளின் அரிவாள். கும்பிட்ட கைகளை வெட்டித் தள்ளிய குஜராத் இந்து வெறியர்களின் அரிவாளுக்கும் இந்த அரிவாளுக்கும் என்ன வேறுபாடு? அந்தக் கிரிமினல்களுக்கும் இந்தக் கிரிமினல்களுக்கும் என்ன வேறுபாடு? அது காவி, இது சிவப்பு என்பது மட்டும்தான்.

கொலைகளின் மூலம் புரட்சியாளர்களை நசுக்கி விடலாம் எனப் பாசிஸ்டுகளைப் போலவே கனவு காண்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். அந்தக் கனவு விரைவில் கலையும். கலைப்போம்!

· பாலன்
புதிய கலாச்சாரம் - 2008

4 பின்னூட்டங்கள்:

said...

"தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவதில் வாசகர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்!"

மானமிகு நறுமுகய்,
சுதந்திர எழுத்துக்களை கொண்டாடும் தமிழ்மானம்

"It is not about Freedom of Expression but it is all about Expression of Freedom!"

said...

நன்றி தமிழ்மானம்

அசுரன்

said...

மார்க்சிஸ்டுகள் பாட்டாளிகளை கொலை செய்துவிட்டு இனிமேல் வெக்கமில்லாமல்
பாட்டாளி வர்க்க கட்சி என சொல்லிகொள்ளாமல்

முதலாளிவர்க்க கட்சி என்பதையே சொல்லிக்கொள்ளனும் .


சாராய வியாபாரி கஞ்சா விக்கிறவன் எல்லாம் மார்க்சிஸ்டு கட்சியில் இருந்தா அவன் காரல் மார்க்ஸ்சுகளை
பிரடெரிக் எங்கெல்ஸ் களைத்தான் கொல்வான்

said...

வணக்கம் தோழர்

Related Posts with Thumbnails