TerrorisminFocus

Friday, June 27, 2008

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்!

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்.

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

"வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்த‌வர்,

"பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன், 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிர் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப்போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.

ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தனும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?

இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன், உள்ள தண்ணி நிக்கிதா'ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காத... என்று உதவி கேட்கிறார்.

"மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க? ஏதோ... நானும் கேள்விகள் கேட்டேன்.

"பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி(மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு.

கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்குத் ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.

இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்''.


எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?

''எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. "போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?"ன்னு எங்காளுங்க கேழி(வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி.ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு.

ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துங்கடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக்கூடாத்துலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடிய தொறந்தா போதும் ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும்.

பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியது தான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம்.

சாதாரண தண்ணியா அது. காதெல்லாம் சும்மா "கொய்ய்ய்ய்ய்ங்'ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்னா பண்றது? சோறு துன்னாவனுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே... அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதானாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.

நெறயபேரு செத்துப்போய்ட்டானுங்க. எம்ஜேர் ஆட்சில, செத்துப்போனவங்க பொண்டாட்டிங்களுக்கு வேல குடுத்துட்டாரு. ''எப்பா, எப்பா... குடுத்தாலும் குடுத்தாரு எம்ஜேரு... பொண்டாட்டிங்க எல்லாம் ஊட்டுக்காரனப் பாத்து "சான்டாக் குடிச்சவனே! ஏன்டா உன்னம் சாவாம கடக்குற. எங்கனா வண்டில மாட்டி சாவாண்டா. நான் வேலைல சேந்துக்கினு ரெண்டு ஊட்டுக்காரன் வச்சிக்குவேண்டா'னு சொல்லி அசிங்கசிங்கமா பேசுவாளுங்க. அதான் எம்ஜேர் ரெண்டு வெரலைக் காட்னார்ல...?'' விரலைக் காட்டியபடியே சொல்லிச் சிரிக்கிறார் ஆதிமூலம்.

கவெர்மெண்ட் வேலையை மலை போல் நம்பி வந்த ஆதிமூலத்தின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது கண்கூடு. இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது.

2020ல் இந்தியா வல்லரசாகும் என்கிறார்கள். செவ்வாய்க்கு ராக்கெட் விட்டவர்கள், எங்கோ விண்வெளியில் தண்ணீரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். எல்லாம் விரல் நுனியில் என்று எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.

Related Articles:
குப்பையாகிப் போன வாழ்க்கை : குப்பையைக் கிளறித் தினியைத் தேடும் கோழியைப் போல வாழும் சிறுவர்களின் அவலக் கதை.
அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?
நன்றி கெட்ட சமூகமே! நீ மூகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும் இவர்களும் மனிதர்களே!

17 பின்னூட்டங்கள்:

said...

தலைப்பை பார்த்தவுடன் உன்னை நாலு சாத்து சாத்தணும்னு வந்தேன். மேட்டரைப் படித்ததுமே கிரங்கிப்போனேன். சூப்பர் இதை இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

said...

வக்காளி.. இந்த கவருமெண்டப் போட்டுக் கொளுத்தனும்யா..

ராக்கெட்டு, மிஸைலு, மயிறு, மட்ட.. எல்லா எழவுக்கு கொண்டு போய்க் காசக் கொட்டி கரியாகறானுங்களே.. கொஞ்சமாச்சும் கீழ குனிஞ்சி மக்கள பாக்க வேணாம்?

கருணானீதி ஜெயலலிதா ராமதாசு விஜயகந்து சரத்குமாரு கார்த்தி வைகோ சொனியாகாந்தி மன்மோகன் சிதம்பரம் வாஜ்பாயி அத்வானி இப்புடி எல்லா மொள்ளமாறி முடிச்சவுக்கி நாயிங்களையும் புடிச்சாந்து இப்படி ஒரு பீக்குட்டைல போட்டு அமுக்கினாத்தான் வலின்னா இன்னான்னு புரியும்

said...

இதைக்குறித்து பேச இயலவில்லை
நண்பா

அந்த முதியவரின் வலியும் வேதனையும் ஏசியில் அமர்ந்து கொண்டு பின்னூட்டமிடும் எனக்கு நிச்சயம் தெரியாது.

யாரோ ஒரு கவிஞன் சொன்னது
இங்கே அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்

மலமும் மூத்திரமும் தீட்டென்றால்
வெட்டி எறி
அதன் பிறப்பிடத்தை.......

said...

ஹும்ம்.. என்ன சொல்றது?

//ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள்//

கருவி இருக்கும்..கொண்டு வந்து உபயோகப்படுத்தனும்.. எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்கு நம்ம அரசாங்கங்களுக்கு?

said...

//கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன்//

//சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்//

மனசு கனத்து விட்டது

//இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது//

உண்மை தான்

//ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.//

நச்சுனு கேள்வி கேட்டீங்க...உங்கள மாதிரி பல பேர் கேட்டுட்டே தான் இருக்காங்க ..ஆனா கொள்ளை அடிக்கவும் ..அடுத்தவனை எப்படி ஏமாத்துறது வர போற காண்ட்ரேக்ட் ல எவ்வளோ அமுக்கலாம்னு இதை தான் யோசனை பண்ணிட்டு இருக்காங்க....இவங்களை போல கஷ்டபடுரவங்க கஷ்டபட்டுட்டே தான் இருக்காங்க

அருமையான பதிவு

said...

பின்னூட்டமிட்டு தமது சமூக கோபத்தை வெளிப்படுத்திய நண்பர்களுக்கு நன்றிகள். இந்த கட்டுரை நண்பர் திங்கள் சத்யா(http://photobala.blogspot.com/2008/05/blog-post_23.html) அவரது தளத்தில் எழுதியது அவரது அனுமதியின்றியே இங்கு சுட்டு பிரசூரித்துள்ளேன். அவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அசுரன்

said...

Your image made an impact on me. being a newcomer it is heartening to see persons like you are really writing about the oppressed lot. I met a few NGO ppl. very shallow ppl with no real social understanding. So no volunteering to NGOs now. Wherever possible we do some social awareness programs without any banners along with some like minded girls. Kudos to you and Sathya.

Thamiz

said...

ஆதிமூலத்தின் வாழ்க்கையை நான் காப்பிரைட் கேட்டுக்கொண்டிருந்தால் இந்த அரசாங்கத்தைவிடக் கேவலமானவனாக ஆகிவிடுவேன். இந்தக் கட்டுரை இன்னாருடையது என்ற நேர்மை இருக்கும்வரை உங்களைப் போன்றவர்களுக்கு 'திங்கள் சத்யா'க்களின் அனுமதி தேவையில்லை. முதலில் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

//தலைப்பை பார்த்தவுடன் உன்னை நாலு சாத்து சாத்தணும்னு வந்தேன். மேட்டரைப் படித்ததுமே
///

நன்றி ஜிம்ஷா

//வக்காளி.. இந்த கவருமெண்டப் போட்டுக் கொளுத்தனும்யா..//

நன்றி அனானி


//மலமும் மூத்திரமும் தீட்டென்றால்
வெட்டி எறி
அதன் பிறப்பிடத்தை.......//


நன்றி அதிஷா


//கருவி இருக்கும்..கொண்டு வந்து உபயோகப்படுத்தனும்.. எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்கு நம்ம அரசாங்கங்களுக்கு?//


நன்றி மனதின் ஓசை


//ஆனா கொள்ளை அடிக்கவும் ..அடுத்தவனை எப்படி ஏமாத்துறது வர போற காண்ட்ரேக்ட் ல எவ்வளோ அமுக்கலாம்னு இதை தான் யோசனை பண்ணிட்டு இருக்காங்க//

நன்றி கிரி


//I met a few NGO ppl. very shallow ppl with no real social understanding. So no volunteering to NGOs now.//

நன்றி unsettled Women

நன்றி திங்கள் சத்யா

said...

அனானி, சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மை உரசும் போது இப்படித் தான் பொத்துக் கொண்டு கொட்டுவோம்.

இன்னும் கவன ஈர்ப்பை வலுப்படுத்த இங்கு சுட்டி தந்து இணைத்துக் கொள்கிறேன்.

said...

:((

மனம் கனக்கச்செய்யும் பதிவு.

said...

வருகைக்கு நன்றி சென்ஷி

பதிவை மறு மறு பிரசூரம் செய்தமைக்கு நன்றி முகவை மைந்தன்.

அசுரன்

said...

என்னத்தை சொல்லுறது........ கவலையான செய்தி இதைப்பற்றி உரிய அதிகாரிகளிடம் நீங்கள் பேசி இருக்கலாமே??

said...

இவன் அமெரிக்காவில் இருக்கின்ற நினைப்பில் பேசுவது போல உள்ளது. இந்தியாவில் மனித கழிவு அல்லுப்வர்களை சட்டவிரோதமாக வைத்திருக்கும் பெரிய நிறுவனம் இந்தியன் ரெயில்வே.

எந்த அதிகாரியிடம் என்ன பேசச் சொல்கிறீர்கள் இவன்?

பேசி என்ன சாதிக்கலாம் என்றும் எங்களுக்கு கொஞ்சம் புரிய வைக்கலாம்.

அசுரன்

said...

பல நாட்களுக்கு முன் மலம் அள்ளுபவர் ஒருவரை பற்றிய ஒரு சிறுகதை படித்திருந்தேன் .. மேலாண்மை பொன்னுசாமி என்று நினைக்கிறேன் , அதில் அந்த கதையின் நாயகன் தன் வாழ்வு அனுபவங்களை ஒருவர் துணையுடன் புத்தகமாய் வெளியிடுவார்.. அந்த கதையே பல அதிர்ச்சிகளை உண்டாக்கியது, நம் கண்முன்னே, நாமும் அதற்கு ஒரு வகையில் உடந்தையாய் என ஒரு தவறு செய்து கொண்டிருக்கின்றோம் :-( .. பதிவுலகில் பலர் உள்ளோம், மொத்த மக்களில் சிறு துளி எனினும்.. நம் முயற்சியை channelize பண்ண முடியுமா ?

said...

அசுரன் திங்கள் சத்யாவின் பதிவை நீங்கள் எடுத்து வெளியிட்டதற்கு மிகவும் நன்றீ.மிக அபூர்வமாக தோழர் திங்கள் சத்யா போன்றவர்கள் உர்வாகி வருவது மிக மிக சந்தோசமளிக்குறது.அணு சக்தி ஒந்பந்தத்தம் வந்தாலும் உலகமயமாதலாலும் இந்தியா பிராகாசிக்கிறது என்றூ சொல்கிற கும்பலுக்கு இதைக் கொண்டுதான் முகத்திலறைய முடியும்

said...

அருமையான பதிவு...

மனம் கனத்துவிட்டது..
இவர்கள் கண்டிப்பாக கவனிக்கப் படவேண்டியவர்கள்...

//மலமும் மூத்திரமும் தீட்டென்றால்
வெட்டி எறி
அதன் பிறப்பிடத்தை.......//

Nalla Irukku Kavithai...

Related Posts with Thumbnails