மகளிர் சுய உதவிக் குழுக்களா? கந்துவட்டி புரோக்கர்களா?
வீட்டு வேலை செய்யும் அக்கா ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குழந்தைகளின் படிப்பு என பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தேன். கடுமையாக உழைக்கும் அந்தப் பெண் எனக்குத் தெரிந்து காலையில் 7 மணிக்கு அவரை அந்தப் பகுதியில் பார்த்தால் இரவு பத்து பத்தரை வரை கூட அங்குதான் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். மூன்று/நான்கு வீடுகளில் வேலை செய்யும் அந்தப் பெண் மாதம் 3000திலிருந்து 4000ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரது சம்பத்தியத்தை நம்பியே அவரது குடும்பம் உள்ளது. இதில்தான் படிப்புச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என அனைத்தையும் செய்து கொள்கிறார்கள்.
இவர்களின் அன்றாடச் செலவுகளுக்கும், தீடீர்ச் செலவுகளுக்கும் இவர்களது சம்பாத்தியம் போதுவதில்லை. வங்கிகளோ இவர்களுக்கு கடன் கொடுப்பது இல்லை. இவர்களின் ஒரே புகலிடமாக சமீப காலம் வரை இருந்து வந்தது ஏலச் சீட்டுக்கள் எனப்படும் சிட்பண்ட்ஸ். அதற்கும் இப்போது ஏகப்பட்ட போடி என்று ஆகிவிட்டது. இன்னிலையில் இது போன்ற எளிய உழைக்கும் மக்களின் உடனடித் தேவைகளுக்கு கடன் கொடுத்து அவர்களது உழைப்பை வட்டியின் மூலம் சுரண்டுவதற்கு என்றே உலக வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள். இது தவிர்த்து கிராம சந்தையை அபகரிக்கும் திட்டங்கள், மகளிர் சுய உதவிக் குழு மூலம் அமைப்பாக உள்ள பெண்களை அந்தப் பகுதி தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பி விடுவது (ஓசூர் டி வி எஸ்) உள்ளிட்ட உலக வங்கியின் பல்வேறு பயன் நோக்குகளை மகளிர் சுய உதவிக் குழு கொண்டுள்ளது.
இதன் மூலம் கடன் பெறுவது இவர்களுக்கு கிடைக்கும் எளிய வடிவிலான கடனாக உள்ளது. ஆனால் வட்டியோ கந்துவட்டியை மிஞ்சுகிறது. அந்த அக்கா சொன்ன கணக்குப்படி 10,000 ரூபாய்க்கு ஒன்றரை வருடம் வாரத் தவணை முறையில், வாரம் ஒன்றுக்கு 250 ரூபாய் கட்டுகிறார்கள். அதாவது வட்டியும் அசலும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய்(4*250). ஒரு வருடத்திற்கு 12000 ரூபாய். ஆஹ, ஒன்றரை வருடத்திற்கு 18000 ரூபாய் வட்டியும் அசலுமாகக் கட்டுகிறார் அந்த உழைக்கும் பெண். இந்தப் பகுதியில் மட்டும் பத்துக் கணக்கில் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றின் ஒரே தொழில் வட்டிக்கு விடுவது மட்டுமே. ஆரம்பத்தில் உழைக்கும் பெண்களின் தொழில் முனைவுக்கான ஒரு அமைப்பு என்று சொல்லப்பட்டது இன்று அவர்களின் குருதி குடிக்கும் வடிவமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
10,000 ரூபாய் என்பது இந்த பதிவைப் படிக்கும் பலருக்கு வெகு சொற்பமான ஒரு தொகை. ஆனால் இந்தத் தொகையை அந்தப் பெண் ஒன்றரை வருடங்கள் உழைத்து, 8000 ரூபாய் வட்டி கட்டி அடைக்கிறார். இதுதான் இந்திய உழைக்கும் மக்களின் நிலை. சப் பிரைம் கடன்கள் மூலம் அமெரிக்க ஏழை மக்களை அதிக வட்டிக்குச் சுரண்டின நிதி மூலதன நிறுவனங்கள். இங்கு, இந்திய உழைக்கும் பெண்களை சுரண்டுவதற்காகத்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பின்னிருந்து கொண்டு தமது வட்டித் தொழிலை நடத்துகின்றன பெரிய பெரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும்.
இந்தியா பழி வாங்கும்*!! வட்டியும் முதலுமாக...
*(இந்தியா பழி வாங்கும் - துரை. சண்முகம் கவிதை ஒன்றின் தலைப்பு மற்றும் மையக் கருத்து)
அசுரன்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?
நுண்கடன் மிகப்பெரும் கொள்ளை
நுண்கடன் - நுண்தொழில் : ஏழைகளைக் கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதி!
இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !
பெருந்தொழில் நிறுவனங்களின் 'சமூகப் பொறுப்புணர்வு" ஓநாய்களின் திடீர் கரிசனை
வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்
பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை
தேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்

